உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றம்.. தென் கொரியா பயிற்சியாளர் ராஜினாமா.. அதிபர் காட்டம்
சியோல்: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றோடு தென் கொரிய அணி ஏமாற்றத்துடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹாங் மியுங்-போ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மெக்சிகோவின் குவாடலஹாராவில் உள்ள அணியின் பயிற்சி முகாமில் ஹாங் மியுங்-போ இந்த ராஜினாமா முடிவை அறிவித்தார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் தென் கொரியா தனது முதல் போட்டியில் செக் குடியரசை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி நல்ல தொடக்கத்தைப் பெற்றது. ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இறுதியில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக காங்கோ 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தென் கொரியாவின் வெளியேற்றம் அதிகாரப்பூர்வமாக உறுதியானது.

தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய ஹாங் மியுங்-போ, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாகக் கூறினார். கடந்த 2024 ஜூலையில் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற இவர், தென் கொரியாவை தொடர்ந்து 11-வது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறச் செய்தார்.
சன் ஹியுங்-மின் தலைமையிலான வலுவான அணி இருந்தபோதிலும் இந்தத் தோல்வி ஏற்பட்டுள்ளது. முன்னதாக, 2014 பிரேசில் உலகக் கோப்பையின் போதும் இவரது பயிற்சியின் கீழ் தென் கொரியா லீக் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங், நாட்டின் கால்பந்து நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திறமையை விட தனிப்பட்ட விசுவாசத்திற்கும், குழுவாதத்திற்கும் முன்னுரிமை அளித்து தகுதியற்றவர்களைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தியதே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று அவர் சாடினார்.
மேலும், இதுகுறித்து நாட்டின் விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனால் தென் கொரிய கால்பந்து நிர்வாகத்தில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

