
ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து அணிகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து தொடர், போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போலந்தில் உள்ள ரோகிளவ்வில் 'குரூப் ஏ'யை சேர்ந்த கிரீஸ், செக் குடியரசு அணிகள் மோதி கொண்டன.
போட்டி துவங்கிய 3வது நிமிடத்திலேயே செக் குடியரசின் பேட் ஜிராசக் ஒரு கோல் அடித்தார். அதன்பிறகு 6வது நிமிடத்தில் வாக்லவ் பில்லர் ஒரு கோல் அடிக்க, கிரீஸ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். போட்டியின் முதல் பாதியில் நீண்டநேரம் செக் குடியரசின் கட்டுப்பாட்டிற்குள் பந்து இருந்தது.
போட்டியின் 40வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் போட்டாகிஸ் தலையால் முட்டி அடித்த பந்து கோல் வலைக்குள் சென்றது. ஆனால் நடுவர் ஆப்-சைடு என்று அறிவிக்க கோல் வாய்ப்பு பறிபோனது.
இந்த நிலையில் 53வது நிமிடத்தில் தியோபன்ஸ் கிக்கஸ் ஒரு கோல் அடித்து கிரீஸ் அணிக்கு ஆறுதல் அளித்தார். அதன்பிறகு கிரீஸ் 2வது கோல் அடித்து போட்டியை டிரா செய்ய கடுமையாக போராடியது. ஆனால் கிரீஸ் அணியின் போராட்டம் வீணானது.
போட்டியின் முடிவில் செக் குடியரசு 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் செக் குடியரசு காலிறுதிக்கு நுழையும் வாய்ப்பு பிரகாசமாகி வருகிறது.