
யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளை போலந்தும் உக்ரனும் நடத்தி வருகின்றன. 3 லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து போர்ச்சுகல், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகியவை அரை இறுதியில் நுழைந்துள்ளன.,
உக்ரைனின் கீவ் நகரில் 4-வது அதாவது கடைசி காலிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இரண்டு அணிகளுமே சமபலத்தைக் கொண்டவை.
நேற்றைய போட்டியில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க பெரும்பாடுபட்டன. இத்தாலி வீரர் பலோடெல்லியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.ஆனால் கோல் ஏதும் அடிக்க முடியாத நிலையில் இரண்டாவது பாதி விறுவிறுப்பை நோக்கி நகர்ந்தது. 2வது பாதியும் பெரும் போராட்டமாகவே இரண்டு அணிகளுக்கும் இருந்தது. ஆட்டத்தின் 90-வது நிமிட முடிவில் எந்த அணியும் கோல் போடாத நிலையில் கோல் அடிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
என்ன சிறப்பு எனில் இந்த கூடுதல் நேரத்திலும் கூட இரு அணியினரும் கோல் அடிக்கவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தனர். கடைசியாக பெனால்டி ஷூட்டுக்கு ஆட்டம் போனது.
இங்கிலாந்து அணியின் முதல் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை நட்சத்திர வீரர் ரூனி வீணடித்தார். ஆனால் இத்தாலி வீரர் பலோடெல்லி அதிரடியாக கோல் அடித்தார். இரண்டாவது வாய்ப்பில் இங்கிலாந்து வீரர் ஜெரார்ட் கோல் அடிக்க, இம்முறை இத்தாலி வீரர் கோல் அடிக்க தவறினார். இதனால் இரண்டு அனிகளும் 1-1 என சமநிலை வகித்தன.
மூன்றாவது வாய்ப்பில் இங்கிலாந்தின் ரூனி, கச்சிதமாக கோல் அடித்தார். இம்முறையும் இத்தாலி பதில் கோல் திருப்பியது. 4-வது மற்றும் 5-வது வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட, இத்தாலி அணியோ இருமுறையும் கோல் அடித்து 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
பரபரப்பான போட்டியில் வென்றதன் மூலம் இத்தாலி அணி யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி, வலுவான ஜெர்மனியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் 29-ந் தேதி நடக்கிறது வரும் 28-ந் தேதி நடக்க உள்ள முதலாவது அரையிறுதியில் போர்ச்சுகல் அணி, ஸ்பெயின் அணியுடன் மோதுகிறது. இதையடுத்து அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் ஜூலை 1-ந் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. யூரோ கோப்பையை வென்றுவிடலாம் என்று கனவு கண்ட இங்கிலாந்துக்கு பெருத்த ஏமாற்றமே.