
நடப்பு தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் டோனட்ஸ்க் நகரிலுள்ள டான்பாச் அரீனா மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணியும் உச்சநட்சத்திரமான ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் மோதின.
தொடக்கம் முதலே இரண்டு அணிகளும் தங்களது முழுத்திறமையும் வெளிப்படுத்தி ஆடினர். போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோவின் ஆட்டம் அப்படி ஒரு அனல் அடித்தது! அந்த அணியின் பெரீரா, மெளடின்ஹோ உள்ளிட்டோர் ரொனால்டோவுக்கு பக்க பலமாக இருந்தனர். இவர்களை மட்டுமே நம்பி களமிறங்கியதைப் போல் போர்ச்சுகல் ஆடியது. அதே நேரத்தில் ஸ்பெயின் அணியின் காலிஸ்லஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போர்ச்சுகலின் பல முயற்சிகளை ஸ்பெயின் தடுத்து முட்டுக்கட்டை போட்டபடியே ஆடினர். முதல் பாதியில் இரண்டு அணிகளுமே எந்த கோலும் அடிக்கவில்லை.
2-வது பாதியும் டென்ஸனில்தான் ஓடிக் கொண்டிருந்தது. யாரும் யாரையும் கோலடிக்க விடாமல் தடுத்துக் கொண்டே வந்தனர்.அ ஆட்டத்தின் 90-வது நிமிடம் வரை எந்த அணியும் கோலடிக்காததால் பரபரப்பு நிலவியது. இதனால் கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்பட்டது. அப்பொழுதும் கூட இரண்டு அணியினரும் கோலடிக்கவில்லை. ஸ்பெயின் அணி தமக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை கோட்டைவிட்டது.
இறுதியில் போட்டியின் முடிவை நிர்ணையிப்பதற்காக பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது. முதலாவது பெனால்டி ஷூட் வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் சேவி கோல் அடிக்க தவறினார். அவரது முயற்சியை போர்ச்சுகல் கீப்பர் அருமையாக தடுத்தார். போர்ச்சுகல் அணிக்கு கிடைத்த முதலாவது வாய்ப்பை அந்த அணியும் தவறவிட்டது.
2-வது வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் கோல் அடித்தார். இம்முறை பதிலுக்கு போர்ச்சுகலும் கோல் அடித்தது. 3-வது வாய்ப்பில் ஸ்பெயின் மீண்டும் கோல் அடித்தது. இம்முறை போர்ச்சுகல் வீரர் நானி பதில் கோல் அடித்தார். 4-வது வாய்ப்பையும் ஸ்பெயின் வீரர் கோலாக மாற்றினார். பதிலுக்கு போர்ச்சுகல் அணியால் கோல் அடிக்க முடியாமல் போக ஸ்பெயின் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
5-வது மற்றும் இறுதி வாய்ப்பில் ஸ்பெயின் மீண்டும் கோல் அடித்தது. இதனால் இறுதியில் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.