
ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்தும் இத்தொடரின் இன்றைய போட்டியில் போர்ச்சுகல், டென்மார்க அணிகள் மோத உள்ளன.
உக்ரைனில் உள்ள அரினா விவ் மைதானத்தில் இன்று இரவு 9.30 மணிக்கு துவங்க உள்ள இப்போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்பார்த்து போர்ச்சுகல் அணி களமிறங்குகிறது. பல நட்சத்திர வீரர்களை கொண்ட போர்ச்சுகல் அணிக்கு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக செயல்படுகிறார்.
போர்ச்சுகல் அணி முதல் போட்டியில் பலமான ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் உடல்நலக் குறைவில் இருந்து மீண்டுள்ள ஹில்டர் போஸ்டிகா, ஹூகோ அல்மிடா ஆகியோர் போர்ச்சுகல் அணியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்று தெரிகிறது.
மேலும் போர்ச்சுகல் அணியை சேர்ந்த நானி, டென்மார்க் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியவர். நானி அடித்துள்ள 13 கோல்களில் 3 கோல்கள் டென்மார்க் அணிக்கு எதிராக அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
டென்மார்க் அணியில் சைமன் போல்சனுக்கு பதிலாக மைக்கேல் சில்பர்பையூர் சேர்த்து கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கவுன்டர் பகுதியில் உள்ள ரொனால்டோவிற்கு பெரும் உதவியாக இருக்கும்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட டென்மார்க் கோல் கீப்பர் ஸ்டிபன் அன்டர்சன் மீண்டும் அணியில் வாய்ப்பு பெறலாம். மேலும் டென்மார்க்கின் சைமன் ஜையர், டேனியல் அக்கர் போன்ற வீரர்கள் போர்ச்சுகல் அணியின் வெற்றிக்கு தடைக் கற்களாக செயல்படலாம் என்று தெரிகிறது.