டெல்லி: நேரு கோப்பை கால்பந்து தொடர் நாளை டெல்லியில் துவங்குகிறது. முதல் போட்டியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதுகின்றன.
நேரு கோப்பை கால்பந்து தொடர் தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கார் மைதானத்தில் நாளை துவங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இத்தொடரில் இந்தியா, சிரியா, லெபனான், கிர்கிஸ்தான் மற்றும் இலங்கை என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. நாளை நடக்கும் முதல் போட்டியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2007ல் நடந்த தொடரில் பட்டம் வென்று தற்போது நடப்பு சாம்பியனாக வலம் வரும் இந்திய அணி, பயிற்சியாளர் பாப் ஹட்டன் தலைமையில் கடந்த சில மாதங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
துபாய் மற்றும் பார்சிலோனாவில் நடந்த பயிற்சி முகாம்கள் இந்திய வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது என பயிற்சியாளர் ஹட்டன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இத்தொடரில் பட்டம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்குகிறோம். கடந்த தொடரில் சிரியாவை பைனலில் வீழ்த்தினோம். என்றாலும் கால்பந்து தரவரிசையில் 95வது இடத்தில் இருக்கும் சிரியாவை சாதாரணமாக கருத முடியாது. அந்த அணி 7 முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கினாலும் கடும் சவாலைக் கொடுக்கும்.
அவர்கள் சீனா போன்ற பெரிய அணிகளையும் வீழ்த்தியுள்ளனர். நாளை நடக்கும் முதல் போட்டியில் லெபனானை சந்திக்கிறோம். இவர்களிடம் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளோம். இதனால் முதல் போட்டி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தொடரை வெற்றியுடன் துவக்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கேப்டன் பாய்ச்சங் பூட்டியா இந்த தொடரிலும் அசத்துவார் என எதிர்பார்க்கலாம் என்றார்.