
லண்டன் ஒலிம்பிக் போட்டி கோலாகல துவக்க விழாவுடன் இன்று இரவு துவங்குகிறது. துவக்க விழாவிற்கு முன்னதாக கால்பந்து போட்டிகள் நடைபெற்ற வருகிறது. நேற்று அதிக பரபரப்பு மிகுந்த ஆண்களுக்கான கால்பந்து போட்டிகள் நடைபெற்றது.
ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் யூரோ சாம்பியன் ஸ்பெயின், 5 முறை உலக சாம்பியன் பிரேசில், இங்கிலாந்து, உருகுவே, தென்கொரியா, ஜப்பான் உள்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இவை ஏ, பி, சி, டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் நேற்று ஹம்டன்பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 'டி' பிரிவை சேர்ந்த ஸ்பெயின், ஜப்பான் அணிகள் மோதின. இதில் யூரோ சாம்பியன் ஸ்பெயின் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் போட்டியின் 34வது நிமிடத்தில் ஜாப்பான் அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய ஜப்பான் வீரர் ஓட்சூ யூகி ஒரு கோலை அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்பெயின் அணியினர் பதில் கோல் அடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஜப்பான் அணியின் கோல் கீப்பரின் சிறப்பான தடுப்பாட்டத்தில், ஸ்பெயின் அணியின் முயற்சி வீணாது. இதனால் போட்டியின் முடிவில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. யூரோ சாம்பியனான ஸ்பெயின் அணியை ஜப்பான் வீழ்த்தியது ஸ்பெயின் கால்பந்து ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.