மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் எப் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் வென்றது. இதன் மூலம் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் வென்றுள்ளது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.
இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. எப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வென்றது. இந்தப் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் வென்றது.
----
பிரிவு எப்
ஸ்வீடன் - தென்கொரியா
1 - 0
----
* 1986 முதல் தொடர்ந்து உலகக் கோப்பையில் தென் கொரியா விளையாடுகிறது. மேலும் 10வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது. இந்த சாதனையை இதுவரை எந்த ஆசிய அணியும் செய்ததில்லை.
* 2006ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட ஸ்வீடன் தகுதி பெற்றுள்ளது. ஐரோப்பிய அளவிலான தகுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
* இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பையில் சந்தித்தனன. மற்ற போட்டிகளில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 2ல் வெற்றி, 2ல் டிராவுடன் ஸ்வீடன் முன்னிலையில் உள்ளது.
* 1958ல் ஸ்வீடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதன்பிறகு 1994ல் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மற்ற உலகக் கோப்பையில் இரண்டாவது சுற்றை எட்டியதில்லை.
* தென்கொரியா உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. 3ல் டிரா, 5ல் தோல்வி அடைந்துள்ளது.
------
எப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதன் மூலம் 3 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
இந்த நிலையில், இதே பிரிவில் உள்ள தென்கொரியாவுடன் ஸ்வீடனும் இன்று நடந்த ஆட்டத்தில் விளையாடின. அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பதை நிர்ணயிக்கக் கூடியதாக இந்த ஆட்டம் அமைந்திருந்தது.
ஆட்டத்தின் துவக்கம் முதலே ஸ்வீடன் அதிரடி ஆக்ரோஷ ஆட்டத்தில் ஈடுபட்டது. கிட்டத்தட்ட 55 சதவீத நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. 15 முறை கோலடிக்கும் வாய்ப்பை பெற்றது. அதில் 4 முறை கோல் பகுதிக்கு பந்தைச் செலுத்தியது.
கொரியா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டே அதிரடியாகவும் விளையாட முற்பட்டது. ஆனால், ஸ்வீடனின் ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. 5 முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்து. ஆனால், கோல் பகுதிக்கு ஒருமுறை கூட பந்தை செலுத்தவில்லை.
ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஸ்வீடனின் கிரான்குவிஸ்ட் அபாரமாக கோலடித்தார். அதை சமன் செய்வதற்கு எவ்வளவு முயன்றும் தென்கொரியாவின் பாட்சா பலிக்கவில்லை.
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை ஸ்வீடன் வென்றது. 3 புள்ளிகளுடன் அடுத்தச் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது. உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்வீடன் வென்றுள்ளது. கடைசியாக 1958ல் தான் முதல் ஆட்டத்தில் அது வென்றது. அதேபோல் கடந்த 12 ஆண்டுகளில் உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் தென்கொரியா தோல்வி அடைந்ததில்லை. இதுவே முதல் முறையாகும்.