கத்தார்: கேமரூன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஸ்விட்சர்லாந்து கடைசி வரை இரும்பு கோட்டை கட்டியதால் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இன்றைய தினம் ஸ்விட்சர்லாந்து மற்றும் கேமரூன் நாட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சில நிமிடங்களுக்கு இரு அணிகளுமே சரிசமமாக சவால் கொடுத்து நின்றதால் ஒரு கோல் கூட வரவில்லை.
ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் மாறி மாறி அட்டாக்கிங் வியூகத்தால் கோல் அடிக்க முயன்று கொண்டே இருந்தது. ஆனால் இரு அணிகளின் கோல் கீப்பர்களும் சுவர் போல நின்றிருந்ததால் ஒரு கோல் கூட அவர்களை தாண்டி போகவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் ஒரு கோல் கூட இல்லாமல் சமநிலையிலேயே இருந்தது.
ஆனால் 2வது பாதி ஆட்டம் தொடங்கிய உடனேயே ஸ்விட்சர்லாந்து அணி வியூகத்தை மாற்றி அமைத்தது. 2வது பாதி தொடங்கிய 3வது நிமிடத்திலேயே கோல் அடித்தது. அந்த அணியின் ப்ரீல் எம்போலோ மிக துல்லியமாக கோலாக மாற்றினார். இதன்பின்னர் கேமரூன் அணி பலமுறை ஸ்கோரை சமன் செய்ய நினைத்தும் அதற்கு ஸ்விட்சர்லாந்து இடமே கொடுக்கவில்லை.
ஒருபுறம் இரும்புக்கோட்டையை எழுப்பிய ஸ்விட்சர்லாந்து அணி, மற்றொருபுறம் தனது அட்டாக்கிங் கேம்-ஐயும் குறைக்கவே இல்லை. இதனால் தடுப்பதா? கோல் அடிப்பதா? என்ற பதற்றத்திலேயே கேமரூன் அணி கடைசி வரை கோல் அடிக்காமல் தோல்வியை தழுவியது.