
தமிழீழத்துக்கு முதல் இடம்
குரூப் ஏ பிரிவின் முதல் 'நாடாக' தமிழீழத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே பிரிவில் அராமியன்ஸ் சுர்யோயே, குர்திஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. பி, பிரிவில், ஆப்காசியா, ஒகிடானியா, பா சாப்மி ஆகிய அணிகளும், சி, பிரிவில், டார்பர் யுனைட்டட், சவுத் ஒஸ்செடியா, பதானியா அணிகளும், டி, பிரிவில் எல்லான் வன்னின், நாகோர்னோ கராபாக், கவுண்டியா டி நிஸ்ஸா அணிகளும் உள்ளன.
இந்த அணிகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் அவர்கள் சார்ந்த நாடுகளால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட- விடுதலை கோரி போராடுகிற தேசிய இனங்களின் அணிகளாகும்.

சிறுத்தை படத்துடன் சின்னம்
தமிழீழ கால்பந்தாட்ட அணிக்கான வெப்சைட்டில் சிறுத்தையின் படத்தை பொறித்து அதன் மேல், தமிழீழ உதைப்பந்தாட்ட கழகம் என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. வெப்சைட்டின் உள்ளே, எங்கள் தேசம் என்ற பெயரில் தமிழீழம் குறித்து எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவான 'சிலோன்' நாட்டின் அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிதான் தமிழீழம். போர்த்துக்கீசியர், டச்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்கு முன்பு, சிலோனின்' வடக்கு பகுதி தமிழர் நாடாகவும், தென்பகுதி சிங்களநாடாகவும் இருந்தது.

சிங்களத்தை புகுத்தினர்
நிர்வாகத்தை எளிதாக நடத்துவதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இரண்டும் ஒரே நாடாக இணைக்கப்பட்டன. 1948ம் ஆண்டு சிலோனுக்கு ஆங்கிலேயர் சுதந்திரம் அளித்தபோது, கொழும்பை தலைநகராக கொண்ட சிங்கள நாட்டின் கட்டுப்பாட்டில் மொத்த நாட்டையும் அளித்துவிட்டனர். அந்த அரசு சிலோன் பெயரை மாற்றி ஸ்ரீலங்கா என்று அழைக்கிறது. அது முதல் தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு செயல்படுத்த தொடங்கியது.
தமிழர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டனர். சிலோனின் அலுவலக மொழியாக இருந்த ஆங்கிலத்தை அகற்றிவிட்டு சிங்களத்தை புகுத்தினர்.

விடுதலை போராட்டம் தொடங்கியது
இதனால் சிங்களம் தெரியாத தமிழர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்காமல்போனது. அரசியல் மற்றும் கல்வியில் தமிழர்கள் நுழைவது தடுக்கப்பட்டது. 1950களில் தமிழர் பகுதியில் சிங்களர்களை குடியமர்த்த தொடங்கினர்.
அது 1980களில் ராணுவத்தை கொண்டு வலுக்கட்டாயமாக தமிழர்களை அடித்து விரட்டி சிங்களர்கள் குடியிருப்பு அமைத்தனர். அது இன்றும் தொடர்கிறது. அமைதியான முறையில் நடைபெற்ற முயற்சிகள் பலிக்காததை தொடர்ந்து, சிங்கள அரசுக்கு எதிராக, ஆயுத விடுதலை போராட்டம் தொடங்கியது.
இந்த ஆயுதம் தாங்கிய விடுதலை போராட்டம் 2009ம் ஆண்டு இலங்கை ராணுவம் மேற்கொண்ட மானுடத்துக்கு எதிரான கொடுமைகளுடன் முடிவுக்கு வந்தது.

இன அழிப்பு தொடர்கிறது
இப்போதும்கூட பல வகைகளில் தமிழினம் அழிக்கப்பட்டுவருகிறது. தமிழீழம் மட்டுமே தமிழ்தேசத்தில் நடந்துவரும் இன அழிப்புக்கான ஒரே மாற்றாக இருக்கும் என்பதை சர்வதேச சமூகத்துக்கு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு கோனிபா போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பும் வந்துள்ளது
இதனிடையே அசர்பைஜான் கால்பந்தாட்ட சங்கத்திடமிருந்து கோனிபாவுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் நாகோர்னோ கராபாக் அணியை போட்டியில் இருந்து விலக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அணியின் பெயர் கொண்ட பகுதி தங்கள் நாட்டின் எல்லைக்குள்தான் இருப்பதால் அதுபோன்ற பெயரிலான அணிக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடுகளுக்கு பதிலடி
இதற்கு கோனிபா அளித்துள்ள பதிலில், "இதுதான் கோனிபா. புறக்கணிக்கப்பட்ட பிராந்தியங்கள், மக்கள், சிறுபான்மையினர், நாடுகள், தனித்துவிடப்பட்ட பிரதேசங்களுக்கு கால்பந்து போட்டி வடிவில் வாய்ப்பளிப்பதுதான் கோனிபாவின் நோக்கம். அங்கீகரிக்கப்பட்ட நாடுகளை அங்கீகரிக்கப்படாத பகுதிகளுடன் இணைக்கும் பாலமாக கோனிபா செயல்படுகிறது. உலகின் அனைத்து மூலைகளிலும் உள்ள மக்களும், சர்வதேச அளவில் தங்களது கலாச்சாரத்தையும், திறமையையும் காண்பிக்க நாங்கள் வாய்ப்பளிக்கிறோம்." என்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ அணியில் யார் யார்
தமிழீழம் அணியில் பல நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் வீரர்களாக களம் காண்கிறார்கள். கனடா நாட்டில் இருந்து உமேஷ் சவுந்தரலிங்கம், பிரசாந்த் விக்னேஷ்வரராஜா, அரிசன் ராஜசிங்கம், ஐரோப்பாவிலிருந்து ஹரிந்திரன் செல்வநாதன், கதிரவன் உதயனன், கெவின் நாகேந்திரா, மதன்ராஜ் உதயனன், ஜெர்மனியில் இருந்து சிவரூபன் சத்தியமூர்த்தி, மயூரன் ஞானசேகரன், ஜீவிதன் நவநீதகிருஷ்ணன், ஞானேந்திரன் பாலமுரளி, பிரான்சிலிருந்து, பிரசாந்த் ராகவன், முகமது நாசீர், ரவுன்சன் வள்ளிபுரம், மயூரன் செல்லையா, இத்தாலியில் இருந்து கிறிஸ்துமேன் குணசிங்கம் ஆகியோர் களமாடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications

