
பால் அப்புறம் நெல்லி
கடந்த உலக கோப்பையில் ஜெர்மனி நாட்டின் ஆக்டோபஸ் உயிரினமான பால் அனைத்து போட்டிகளிலும் வெற்றி தோல்விகளை சரியாக கணித்து கூறியது. இப்போது பால் இறந்துவிட்ட நிலையில், ஜெர்மனியின் யானையான நெல்லியை கணிப்பு பயிற்சிக்கு ஆயத்தப்படுத்திவிட்டனர். இந்நிலையில் ஜெர்மனிக்கு போட்டியாக, உலக கோப்பையை நடத்தும் பிரேசிலும் ஒரு உயிரினத்தை களமிறக்கியுள்ளது.

வந்துட்டாரு ஆமையாரு..
பிரேசில் பயன்படுத்தும் உயிரினம் பெரிய தலை கொண்ட கடல் ஆமை,. அதன் பெயர் 'கபேகா'. பிரேசிலின் சால்வடார் என்ற பகுதியிலுள்ள உயிரின காப்பகத்திலுள்ள இந்த கடல் ஆமையை கொண்டு இன்று நடைபெறும் போட்டியின் ரிசல்ட் கணிக்கப்பட்டுள்ளது.

எந்த மீனு, அந்த நாடு..
நீச்சல் குளத்தில் கடல் ஆமையை தூக்கிப்போட்டு, இன்றைய போட்டியில் மோதும் பிரேசில் மற்றும் குரோஷியா நாட்டு கொடிகளை குளத்தின் ஓரத்தில் பொருத்தி வைத்தனர். அதேபோல டிரா என்ற வாசகம் அடங்கிய மற்றொரு போர்டும் நடுவே பொருத்தப்பட்டது. கொடிகளின் கீழே மீனை கட்டி தொங்கவிட்டு அதில் எந்த மீனை ஆமை சாப்பிடுகிறது என்பதை ரசிகர்கள் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரேசில் ஆட்டம் டிராவா?
ஆமையார் மெதுவாக சென்று இருபக்கமும் எட்டிப்பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இரு கொடிகளுக்கு கீழே தொங்கிய மீனைவிட்டுவிட்டு டிரா என்று எழுதிய போர்டின் கீழே தொங்கிய மீனை கவ்வுவதற்காக மெல்ல நகர்ந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், காசு கொடுத்து போட்டியை பார்க்க போகிறோம், அதுவும் டிராவாகிவிட்டால் கொடுத்த காசு வீணாகிவிடுமே என்று கலங்க தொடங்கினர்.

முடிவை மாற்றிய ஆமை
திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்ட ஆமையார், பிரேசில் நாட்டு கொடியின் கீழ் தொங்கிய மீனை கவ்விபிடித்து சுவைக்க தொடங்கினார். அவ்வளவுதான் "ஆகா.. ஓஹோ..' என்ற கோஷங்களும், கைதட்டல்களும் அங்கு விண் அதிர கேட்டன. பிரேசில் வெற்றி பெற்றுவிட்டதைப்போன்ற உற்சாகம் குழுமியிருந்த ரசிகர்கள் முகத்தில் தெரிந்தது.

கட்டிபிடிப்பார்களா, கடலில் எறிவார்களா?
"ஆமையாரே சொல்லிட்டாரு, இன்னிக்கு நம்ம டீம் தான் ஜெயிக்குது" என்று பிரேசில் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகிறார்கள். பிரேசிலுக்கு வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக விளையாட்டு விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். எனவே அப்படியே நடக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்துவிட்டால், அடுத்தடுத்த போட்டிகளில் ஆமையாருக்கு கடும் டிமாண்ட் இருக்கும். பிரேசில் தோற்றுவிட்டால், மீண்டும் 'கபேகா' கடலில் தூக்கிபோடப்படுவார்.

இப்படி கிளம்பிட்டாங்களே..
இங்கிலாந்து காரர்கள் சும்மா இருப்பார்களா, அவர்களும் ஒரு ஆமை, கீரி, பெரிய சைஸ் காட்டுப் பூனை ஆகியவற்றை வைத்து தங்கள் நாட்டு போட்டிகளை கணித்தனர். வரும் சனிக்கிழமை இங்கிலாந்தும், இத்தாலியும் மோத உள்ள போட்டியின் ரிசல்ட்டை அவற்றிடம் கணிக்க கூறினர். இதில் ஆமை, மற்றும் பூனை, இங்கிலாந்து வெற்றி பெறும் என்றும், கீரி இத்தாலி வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளன. நாடுகளின் பெயர் எழுதிய பைகளை தொங்கவிட்டு அதில் எந்த பையிலுள்ள தீனியை இவை சாப்பிடுகின்றன என்பதை இங்கிலாந்து ரசிகர்கள் கணித்தனர்.


Click it and Unblock the Notifications

