மாஸ்கோ: கடந்த 2014 உலகக் கோப்பை காலிறுதியில் விளையாடிய அணிகளில் பிரேசில், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகியவை மட்டுமே இந்த உலகக் கோப்பை காலிறுதிக்கு நுழைந்துள்ளன.
21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. காலிறுதி ஆட்டங்கள் நாளை துவங்குகிறது.
நாளை நடைபெறும் ஆட்டங்களில் உருகுவே - பிரான்ஸ், பிரேசில் - பெல்ஜியம் சந்திக்கின்றன. நாளை மறுநாள் நடக்கும் ஆட்டங்களில் ரஷ்யா - குரேஷியா, ஸ்வீடன் - இங்கிலாந்து சந்திக்கின்றன.
கடந்த 2014 உலகக் கோப்பையோடு ஒப்பிடுகையில், அந்த உலகக் கோப்பையில் கால் இறுதியில் விளையாடிய 8 அணிகளில் 3 அணிகள் மட்டுமே இந்த உலகக் கோப்பை காலிறுதிக்கு நுழைந்துள்ளன.
பிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே கடந்த உலகக் கோப்பையின் காலிறுதியிலும் விளையாடின. அதில் பிரேசில் அரை இறுதியில் விளையாடியது.
2014 உலகக் கோப்பை காலிறுதியில் ஜெர்மனி 1-0 என பிரான்ஸை வென்றது. பிரேசில் 2-1 என கொலம்பியாவை வென்றது. அர்ஜென்டினா 1-0 என பெல்ஜியத்தை வென்றது. நெதர்லாந்து 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் கோஸ்டாரிகாவை வென்றது.
தற்போது காலிறுதியில் உள்ள பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா ஆகியவை இதுவரை பைனல் நுழைந்ததில்லை. முதல் முறையாக பைனல் நுழைவதற்கான வாய்ப்பு இந்த அணிகளுக்கு கிடைத்துள்ளது. இங்கிலாந்து, ஸ்வீடன், உருகுவே ஆகியவை கடந்த 50 ஆண்டுகளில் பைனல் நுழைந்ததில்லை. அதனால், கடந்த 50 ஆண்டுகளில் பைனலில் விளையாடாத ஒரு அணி, இந்த முறை பைனலில் விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அல்லது ஒரு புதிய அணி முதல் முறையாக பைனல் விளையாடும்.
காலிறுதியில் விளையாடும் பிரேசில், பிரான்ஸ் மட்டுமே கடந்த 50 ஆண்டுகளுக்குள் கோப்பையை வென்றுள்ளன.