மாஸ்கோ: உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஃபிபா உலகக் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று விவாதம் நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்பது தெரியுமா.
உலகின் மிகப் பெரியத் திருவிழா என்று உலகக் கோப்பை கால்பந்து கூறப்படுவதற்கு, ஃபிபாவில் உறுப்பினர்களாக உள்ள 211 நாடுகளில், பல்வேறு தகுதிச் சுற்றுக்குப் பிறகு 32 நாடுகள் மட்டுமே பங்கேற்பது மட்டும் காரணமல்ல. அனைத்து கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் பங்கேற்பதுடன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதை பார்ப்பதும் முக்கிய காரணம்.

அதேபோல் மிகப் பெரிய பரிசுத் தொகை கொண்டதாக உள்ளதாலும், கால்பந்து உலகக் கோப்பைக்கு எப்போதும் தனி மவுசுதான்.
இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன. அதில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த நாடு கூட குறைந்தபட்சம், ரூ.53 கோடி ரூபாயுடன் செல்கின்றன.
21வது ஃபிபா உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 2680 கோடி ஆகும்.
இதில் கோப்பையை வெல்லும் அணி ரூ. 255 கோடி, இரண்டாவது இடம் பிடிக்கும் அணி ரூ. 188 கோடி பரிசுத் தொகையை பெறும். மூன்றாவது இடம் பிடிக்கும் அணி ரூ. 161 கோடி, நான்காவது இடம் பிடிக்கும் அணி ரூ. 147 கோடி பரிசுத் தொகையைப் பெறும்.
காலிறுதி சுற்றில் விளையாடிய மற்ற நான்கு அணிகளுக்கு தலா - ரூ. 107 கோடி கிடைக்கும். நாக் அவுட் சுற்றில் விளையாடிய மற்ற 8 அணிகளுக்கு தலா - ரூ. 80 கோடி கிடைக்கும். முதல் சுற்றில் வெளியேறிய 16 அணிகளுக்கு தலா - ரூ.53 கோடி.
இதைத் தவிர 32 நாடுகளுக்கும், போட்டிக்குத் தயாராவதற்காக தலா ரூ.8.5 கோடி, வீரர்களை விடுவித்ததற்காக கிளப் அணிகளுக்கு இழப்பீடு என வழங்கப்பட்டுள்ளது.