யுஇஎஃப்ஏ கால்பந்து கூட்டமைப்பின் அடுத்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய தலைவர் அலெக்ஸாண்டர் செஃப்ரின் அறிவித்துள்ளார்
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸாண்டர் செஃப்ரின். இவர் 2011 முதல் 2016 வரை ஸ்லோவேனியா கால்பந்து சங்கத்தின் தலைவராக இருந்தவர். அதன்பின் யுஇஎஃப்ஏ என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலில் போட்டியிட்டார். அதில் மொத்தமாக 42 வாக்குகளை பெற்ற அவர், அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றிபெற்றார்.

2016ம் ஆண்டை தொடர்ந்து 2019 மற்றும் 2023 ஆகிய தேர்தல்களிலும் வென்று பல்வேறு மாற்றங்களை செய்து வந்தார். இதனிடையே பாரீஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில், UEFA சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி பார்த்தால், 2031ஆம் ஆண்டு வரை அலெக்ஸாண்டர் செஃப்ரினின் பதவி காலத்தை நீட்டிக்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தில் தான் இல்லை என்று அலெக்ஸான் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து யுஇஎஃப்ஏ தலைவர் அலெக்ஸாண்டர் செஃப்ரின் பேசுகையில், 6 மாதங்களுக்கு முன்பாகவே தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு நிர்வாகத்திலும் சில ஆண்டுகளுக்கு பின் அடுத்த தலைமுறை இளைஞர்கள் பொறுப்புக்கு வர வேண்டும். அதேபோல் குடும்பத்தினரிடம் இருந்து 7 ஆண்டுகளாக பிரிந்து இருக்கிறேன்.
மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற இந்த தகவலை வேண்டுமென்றே கூறவில்லை. சிலரின் உண்மையான முகத்தை பார்க்க விரும்பினேன். அதனை பார்த்துவிட்டேன். எனக்கு கால்பந்திலும் சரி, கால்பந்து விளையாட்டுக்கு வெளியிலும் சரி.. சிறந்த வாழ்க்கை அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.