துவங்கியது நாக்அவுட்
நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று துவங்கியுள்ளன. இதில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. அடுத்த நடந்த ஆட்டத்தில் உருகுவே 2-1 என போர்ச்சுகல்லை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இந்த உலகக் கோப்பையில்
இந்த உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த உருகுவே, லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்றது. எகிப்தை 1-0, சவுதி அரேபியாவை 1-0, ரஷ்யாவை 3-0 என வென்றது. போர்ச்சுகல் 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி, 2ல் டிரா செய்தது. முதல் ஆட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோலடிக்க 3-3 என ஸ்பெயினுடன் டிரா செய்தது. மொராக்கோவை 1-0 என்ற வென்றது. கடைசி ஆட்டத்தில் ஈரானுடன் 1-1 என டிரா செய்தது.
ரொனால்டோ கோலடிக்கவில்லை
இன்று நடந்த ஆட்டத்தில் 67 சதவீத நேரம் பந்து போர்ச்சுகல் அணியிடமே இருந்தது. ஆனால், உருகுவேயின் தடுப்பாட்டத்தை தகர்க்க முடியாமல் திணறியது. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ லீக் ஆட்டங்களில் ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை அடித்துள்ளார். இதுவரை நாக் அவுட் சுற்றில் ஒரு கோல் கூட ரொனால்டோ அடித்ததில்லை. அந்த ராசி அவருக்கு தொடர்கிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் கோல் ஏதும் அடிக்கவில்லை.
கவானி அபாரம்
ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே கவானி முதல் கோலடிக்க 1-0 என உருகுவே முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் பீபே கோலடிக்க 1-1 என போர்ச்சுகல் சமநிலையை உருவாக்கியது. 62வது நிமிடத்தில் கவானி மீண்டும் கோலடிக்க 2-1 என உருகுவே முன்னிலை பெற்றது. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வென்று காலிறுதிக்கு முன்னேறியது உருகுவே. மெஸ்ஸியின் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியும் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது.