தோஹா : அமெரிக்காவின் ஆண்கள் தேசிய கால்பந்து அணி கத்தாரில் திட்டமிட்டு இருந்த பயிற்சி முகாமை ரத்து செய்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களால் இந்த அவசர முடிவை எடுத்துள்ளது அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு.
ஜனவரி 5 முதல் கத்தார் தலைநகர் தோஹாவில் இருக்கும் ஆஸ்பையர் அகாடமியில் 20 நாள் பயிற்சி முகாம் தொடங்க திட்டமிடப்பட்டு, 25 வீரர்களை அமெரிக்க பயிற்சியாளர் கிரெக் பெர்ஹால்டர் தேர்வு செய்து இருந்தார்.
இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் ட்ரோன் தாக்குதல் மூலம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இதை அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் உறுதிப்படுத்திய 24 மணி நேரத்திற்குள், அமெரிக்க கால்பந்து பயிற்சி ரத்து முடிவை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல் சம்பவத்துக்கு ஈரான் பதிலடி கொடுப்பதாக உறுதி கொண்டுள்ளது. அதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "அந்த பிராந்தியத்தில் வளர்ந்து வரும் நிலைமை காரணமாக, ஆண்கள் தேசிய அணியின் திட்டமிடப்பட்ட ஜனவரி பயிற்சி முகாமுக்கான கத்தார் பயணத்தை ஒத்திவைக்க அமெரிக்க கால்பந்து முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கலிபோர்னியாவின் கார்சனில் உள்ள டிக்னிட்டி ஹெல்த் ஸ்போர்ட்ஸ் பூங்காவில் பிப்ரவரி 1 ஆம் தேதி கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராகும் வகையில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக கூறி இருக்கிறது அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு.
மேலும், கத்தாரின் உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் விருந்தோம்பலை எங்கள் அணி அனுபவிப்பதற்காக, கத்தார் கால்பந்து அமைப்புடன் இணைந்து எதிர்காலத்தில் ஒரு நல்ல வாய்ப்பில் நாங்கள் பணியாற்றுவோம் என்றும் கூறி உள்ளது.
சால்ஸ்பர்க் அணிக்கு எதிராக கத்தார் பயிற்சி முகாமில் ஒரு நட்பு போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், அமெரிக்க அணி 2020ஆம் ஆண்டில் தங்கள் முதல் போட்டியில் ஆட உள்நாட்டிலேயே தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாட்டில் முதன்முறையாக நடைபெற இருக்கும் ஃபிபா 2022 கால்பந்து உலகக் கோப்பை கத்தார் நாட்டில் தான் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.