சென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடந்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
நாடு: பிரேசில்
இ பிரிவில் செர்பியா, சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா உடன் இடம்பெற்றுள்ளது.
லீக் சுற்று ஆட்டங்கள்:
ஜூன் 17ல் சுவிட்சர்லாந்து
ஜூன் 22ல் கோஸ்டாரிகா
ஜூன் 27ல் செர்பியா
பிபா தரவரிசை: 2
கடந்த உலகக் கோப்பையில்: பைனல், இரண்டாம் இடம் பிடித்தது
உலகக் கோப்பையில் சிறந்த இடம்: 1958, 1962, 1970, 1994, 2002ல் சாம்பியன்
முக்கிய வீரர்கள்: நெய்மர், ராபர்டோ பிர்மினோ, பிலிப் கோடின்ஹோ, பாலின்ஹோ
கோச்: ஆட்னார் லியனார்டோ பாச்சி (சீசி)
இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ள ஒரே அணியான பிரேசில், ஐந்து முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.
இந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நெய்மர் போன்ற உலகப் புகழ்பெற்ற வீரர்கள், யாரை களத்தில் இறக்குவது என்று யோசிக்க வைக்கக் கூடிய திறமையான வீரர்கள் அடங்கியது பிரேசில்.
நாடி, நரம்பு, ரத்தம் என, உடம்பெல்லாம் கால்பந்து வெறியோடு உள்ள பிரேசில் அணி, இந்த உலகக் கோப்பையை தகுதி பெறுமா என்ற நிலையில் இருந்து, கோப்பையை வெல்லக் கூடிய அணியாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அணியின் கோச் சீசி என்று அழைக்கப்படும் லியனார்டோ பாச்சி.
கடந்த உலகக் கோப்பையில் பைனலில் ஜெர்மனியிடம் கோப்பையை தவறவிட்டது பிரேசில். அதன்பிறகு அணிக்கு தொடர்ந்து சரிவுமுகமாகவே இருந்தது. தொட்டது எல்லாம் தோல்வியாகவே அமைந்தது.
கோச்சாக இருந்த துங்கா, எந்த நேரத்திலும் தூங்க முடியாமல் தவித்தார். நடுவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் சமாளித்து விடலாம் என்று நினைத்தார். ஆனால், எந்தப் பக்கம் திரும்பினாலும், பிரேசில் அணிக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழுந்தது.
உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்து, 6வது இடத்தில் பரிதாபமாக இருந்தது. அப்போதுதான் அணியின் கோச்சாக சீசி பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 18 மாதங்களில், பிரேசில் அணி, புதுப் பொலிவுடன், தொட்டது எல்லாம் துலங்கும் அணியாக மாறியுள்ளது. தற்போது ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், ஒருங்கிணைந்து, அணியாக விளையாட வேண்டும். தற்போது இ பிரிவில் உள்ள கோஸ்டாரிகா, செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகளை சாமானியமாக கருதாமல் விளையாடி.னால் தான் பிரேசிலின் கோப்பை கனவு பலிக்கும்.