மாஸ்கோ: சிறப்பாக நாடகமாடுவதாக பிரேசிலின் நெய்மரை பலரும் வறுத்து எடுக்கையில், அந்த அணியின் வில்லியான் வெகுவாக பாராட்டியுள்ளார். இவர் உண்மையிலேயே பாராட்டுகிறாரா, அல்லது கிண்டல் செய்கிறார் என்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அந்த பாராட்டு அமைந்துள்ளது.
ரஷ்யாவில் நடந்து வரும் ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி ஆட்டம் நாளை துவங்குகிறது. இதில் பெல்ஜியத்தை சந்திக்கிறது பிரேசில்.

ஐந்து முறை உலகக் கோப்பை சாம்பியனான பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர், இந்த உலகக் கோப்பையில் சொதப்பி வருகிறார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில காலம் விளையாடாமல் இருந்தார். இந்த உலகக் கோப்பையில் இதுவரை 2 கோல்கள் மட்டுமே அடித்துள்ளார், உலகின் காஸ்ட்லி வீரரான நெய்மர்.
அவருடைய ஆட்டத் திறனைவிட, அவருடைய நடிப்பு திறமையை இந்த உலகக் கோப்பையில் அதிகம் உள்ளதாக சமூகதளங்களில் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். தொட்டதெற்கெல்லாம், காலில் அடிப்பட்டதுபோல, கீழே விழுந்து, உருண்டு, புரண்டு நெய்மர் செய்யும் இம்சைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
யாருமே இல்லாத டீக்கடையில் டீ போடுவதுபோல், யாருமே அருகில் இல்லாவிட்டாலும், தானாகவே கீழே விழுந்து உருண்டு, கண்ணீர் விட்டு நெய்மர் நாடகம் ஆடி வருகிறார். அவர் நடத்தும் நாடகங்களைப் பார்த்து இது என்ன உலகக் கோப்பையா அல்லது ஆஸ்கர் விருதுக்கான போட்டியா என்ற சந்தேகம் ஏற்படுத்தும் அளவு, மனுஷன் பாடாய் படுத்துகிறார்.
இந்த நிலையில், நெய்மரை பிரேசில் அணியின் வீராரன வில்லியான் பாராட்டியுள்ளார். "உங்களுக்கு எல்லாம் தெரியாது, நெய்மர் எவ்வளவு சிறந்த வீரர் என்று. அவருடைய ஆட்டத்திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெய்மர் மிகச் சிறந்த வீரர், அவரோட லெவலே வேறு" என்று மூச்சு விடாமல் ஒரே டேக்கில் 2 பக்க வசனத்தை கூறியுள்ளார் வில்லியான்.
இவன் உண்மையிலேயே பாராட்டுகிறானா அல்லது நம்பள கிண்டல் பண்றானா என்று நெய்மருக்கே சந்தேகம் ஏற்படும் அளவுக்கு புகழ்ந்து தள்ளியுள்ளார் வில்லியன். நெய்மரின் பிரேசில் அணி இந்த உலகக் கோப்பையில் இருக்கும் வகை, மீம்ஸ் போடுபவர்கள் காட்டில் மழைதான்.