சென்னை:21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
நாடு : அர்ஜென்டீனா
டி பிரிவில் குரேஷியா, நைஜீரியா, ஐஸ்லாந்து உடன் இடம் பெற்றுள்ளது.
லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 16ல் ஐஸ்லாந்து
ஜூன் 21ல் குரேஷியா
ஜூன் 26ல் நைஜீரியா
ஃபிபா தரவரிசை : 4
கடந்த உலகக் கோப்பையில் : பைனல் (இரண்டாவது இடம் பிடித்தது)
உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1978, 1986ல் சாம்பியன்
முக்கிய வீரர்கள் : லியோனல் மெஸ்ஸி, செர்ஜியோ ஆகுரோ, கோன்சலோ ஹூகுயின், பாவ்லோ டைபலா
கோச் : ஜோர்ஜ் சம்போலி
லியோனல் மெஸ்ஸி என்ற ஒருவரை நம்பியே அர்ஜென்டீனா அணி உள்ளது. கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறந்த வீரர்கள் பட்டியலில் உள்ள மெஸ்ஸியை நீக்கிவிட்டு பார்த்தால் அர்ஜென்டீனா ஒரு சாதாரண அணியாகவே இருக்கும்.
இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஈக்வடார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி ஹாட்ரிக் கோலடித்தார். அதனால் தான், உலகக் கோப்பையை அர்ஜென்டீனா தகுதி பெற்றது.
மெஸ்ஸி இல்லாமல் இருந்தால், உலகக் கோப்பைக்கு அர்ஜென்டீனா தகுதி பெற்றிருக்குமா என்பதும் சந்தேகமே. இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அணி, மெஸ்ஸியின் மேஜிக்கை நம்பியே இந்த உலகக் கோப்பையில் களமிறங்குகிறது.
கடந்த உலகக் கோப்பையில் பைனல் வரை நுழைந்தது. கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. அதற்கு பின், 2015 மற்றும் 2016ல் நடந்த கோபா அமெரிக்கா போட்டியிலும் இரண்டாவது இடத்தையே பிடித்தது.
இவ்வாறு கிட்டத்தட்ட கோப்பையை நெருங்கி, அதை இழக்கும் வலி மெஸ்ஸிக்கும், அர்ஜென்டீனாவுக்கும் தெரியும். இந்த உலகக் கோப்பையில், அதுபோன்ற தவறை செய்ய மாட்டோம் என்று மெஸ்ஸி கற்பூரம் அடித்து சத்தியம் செய்துள்ளார்.
மெஸ்ஸியின் மேஜிக்கால் முதலில் நடக்கும் பிரிவு சுற்று ஆட்டங்களில் வென்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதில் எந்த சந்தேகம் இல்லை. மெஸ்ஸி மேஜிக்குடன் அணியின் மற்ற வீரர்களும் இணைந்தால், 1986ல் மாரடோனா செய்ததைப் போல, அர்ஜென்டீனாவுக்கு மீண்டும் கோப்பை கிடைக்க வாய்ப்பு உள்ளது.