இங்கிலாந்தை நொறுக்கியது நெதர்லாந்து-டென் அபார சதம்

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் பர்ரேசி அபாரமாக ஆடி 25 பந்துகளில் 29 ரன்களைக் குவித்தார். கூப்பர் படு நிதானமாக ஆடி 47 ரன்களைச் சேர்த்தார்.
ஆனால் ரியான் டென் டஸ்சேட்டும், க்ரூத்தும் இணைந்துபோதுதான் வான வேடிக்கை ஆரம்பமானது. குறிப்பகா டென்னின் ஆட்டம் அபாரமாக இருந்தது. இங்கிலாந்து பந்து வீச்சை அடித்து விளாசிய அவர் சிறப்பான சதத்தையும் போட்டார். உலகக் கோப்பைப் போட்டியில் அவர் போட்ட முதல் சதம் இது.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 110 பந்துகளில் 119 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். க்ரூத் 28 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் பீட்டர் போரன், 24 பந்துகளில் 35 ரன்களை விளாசினார். முடாசர் புகாரி 5 பந்துகளில் 6 ரன்களை எடுத்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடைசி பத்து ஓவர்களில்தான் நெதர்லாந்து பின்னி எடுத்து விட்டது. வந்த பந்துகளை பவுண்டரிகளுக்கு விளாசுவதில் கை தேர்ந்த வீரர்களைப் போல ஆடினர் நெதர்லாந்து வீரர்கள். இங்கிலாந்து பந்து வீச்சு மட்டுமல்லாமல், பீல்டிங்கும் இன்று படு மோசம்.
50 ஓவர்கள் முடிவில், நெதர்லாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 292 ரன்களைக் குவித்தது. மிகப் பெரிய இங்கிலாந்து அணிக்கு எதிராக நெதர்லாந்து நடத்திய ரன் வேட்டை கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதை விட முக்கியமாக சுண்டைக்காய் அணியாக கருதப்பட்ட நெதர்லாந்திடம் இங்கிலாந்து திணறியதும், ஆல் அவுட் செய்ய முடியாமல் போனதும் இங்கிலாந்து ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications