புவனேஸ்வர்: சில ஆண்டுகாலத்துக்கு முன்பு இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த ஒடிஷா வீராங்கனை தற்போது வாழ்க்கையை ஓட்டுவதற்கு 'வெற்றிலைப் பாக்கு' கடையை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஒடிஷாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் அவுல் என்ற இடத்தில் வெற்றிலை பாக்கு கடை வைத்து நடத்தி வருபவர் ரஷ்மிதா பத்ரா. அவர் ஒரு கூலித் தொழிலாளியின் மகள்.
தற்போது 23 வயதாகும் ரஷ்மிதாவின் 12 வயதில் அவருக்கு இருந்த கால்பந்தாட்ட ஆர்வத்தை கண்டறிந்தனர் பயிற்சியாளர்கள் சிட்டா ரஞ்சன் பத்ரா, பிரமோத் பத்ரா. இருவரும் ரஷ்மிதாவுக்கு பயிற்சி அளித்தனர். இதைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் ரஷ்மிதா பங்கேற்றார்.
2008 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டோர் இந்திய கால்பந்து அணியின் பெண்கள் அணியில் சார்பாகவும் ரஷ்மிதா விளையாடினார். அதன் பின்னர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் 2011ஆம் ஆண்டு மீண்டும் விளையாடினார்.
பின்னர் பக்ரைன் போட்டியிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால் 10ஆம் வகுப்பு கூட கல்வி கற்காததால் அவருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வறுமை ரஷ்மிதாவை துரத்த இப்போது வெற்றிலை பாக்கு கடை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.