ரியோடி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணியை பிரேசில் எளிதில் வீழ்த்தி தனது வலிமையை பறைசாற்றியது.
உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் போட்டித்தொடரை நடத்தும், பிரேசிலும், கேமரூனும் இன்று அதிகாலை மோதின. ஆட்டம் தொடங்கிய 17வது நிமிடத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதல் கோலை போட்டு விறுவிறுப்பை அதிகப்படுத்தினார்.

பிரேசில் ஆதிக்கம் தொடரும் என்ற ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் கேமரூன் அணியின் ஜோயல் மேடிப், கோல் போட்டு அசத்தினர். இதனால் ஆட்டம் சமமானது. ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே சென்று அமர்ந்தனர். ஆனால் சளைக்காமல் போராடிய நெய்மர், ஆட்டத்தின் 35 வது நிமிடத்தில் கோல்போட்டு பிரேசிலை முன்னணிக்கு கொண்டுவந்தார்.
இதன்பிறகு ஆட்டத்தை பிரேசில் வீரர்கள் தங்கள் வசம் கொண்டுவந்தனர். இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது 49வது நிமிடத்திலேயே பிரேசிலின் ஃபிரெட் கோல் போட்டு பிரேசிலின் ஆதிக்கத்தை தொடரச் செய்தார். ஆட்டம் முடிவடையப்போகும் நிலையில் 86வது நிமிடத்தில் மீண்டும் பிரேசிலின் பெர்னான்டின்ஹோ ஒரு கோல் போட்டார்.
ஆட்ட நேர இறுதியில் பிரேசில் 4க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் கேமரூனை எளிதாக வீழ்த்தியது. முன்னதாக ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில்,பிரேசிலின் பாலின்ஹோ அடித்த பந்தை கேமரூன் அணியின் நியோம் கோல் விழாமல் லாவகமாக தடுத்து ரசிகர்கள் பாராட்டை பெற்றார். 11வது நிமிடத்தில் கேமரூனின் எனோஹ் பவுல் செய்தார். அவருக்கு நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.