டெல்லி: ஃபிபா உலகக் கோப்பையில் மற்ற எல்லாவற்றையும்விட அதிகம் பேசப்பட்டது பிரேசில் வீரர் நெய்மரின் ஆக்டிங் காட்சிகள் தான். இது தொடர்பாக பல கிண்டலடிக்கும் மீம்ஸ்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் இணைந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்.
ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர், காலில் அடிப்பட்டதுபோல், உருண்டு புரண்டு செய்த சாகசங்கள்தான் கடந்த சில நாட்களாக உலகெங்கும் பேசப்பட்டது. இது தொடர்பாக பல மீம்ஸ்கள், வீடியோக்கள் என, சமூகதளங்கள் அனைத்திலும் நெய்மரின் ஆக்டிங் ஆட்சியே நடந்து வந்தது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் ஒருதினப் போட்டியில் அபாரமாக விளையாடி இந்தியா வென்றது.
இந்த ஆட்டத்தின்போது, பென் ஸ்டோக்ஸ்க்கு பந்துவீசினார் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். அந்தப் பந்தை பிடித்த ஹார்திக் பாண்டயா அதை சாஹலுக்கு த்ரோ செய்தார். ஆனால், அந்தப் பந்து, சாஹலின் கால் முட்டியில் பட்டது. வலி தாங்காமல் சாஹல் தரையில் உருண்டு புரண்டார்.
இது தொடர்பான படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல், அதற்கு நெய்மர் என்று தலைப்பிட்டுள்ளார். இந்த கமென்ட்தான் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.