ராய்பூர்: சட்டீஸ்கரில் இந்திய அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் ஓட்டலுக்கு திரும்பிய அர்ஜெண்டினா அணியினரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பேருந்து பத்தகாவன் என்ற இடத்தில் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
இந்திய மற்றும் அர்ஜெண்டினா ஹாக்கி அணிகளுக்கு இடையே சட்டீஸ்காரில் நடந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அதன்பின் அர்ஜெண்டினா அணியினர் பேருந்து ஒன்றில் தங்களது ஓட்டல் அறைக்கு திரும்பினர். இந்நிலையில், பத்தகாவன் என்ற இடத்தில் பேருந்து சென்றபோது, திடீரென பேருந்து மீது கள் வீசப்பட்டு அதன் கண்ணாடி உடைந்தது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து, பேருந்தின் ஓட்டுனர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் சாலையில் குறுக்கே நின்று கொண்டிருந்த ஒரு மாட்டை விரட்டுவதற்காக கல்லை எரிந்த போது, அது தவறுதலாக பேருந்தின் கண்ணாடி மீது பட்டுவிட்டது என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அர்ஜெண்டினா ஹாக்கி வீரர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி தொடர்ந்து போட்டிகளில் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஐ.ஜி கூறுகையில், இது தற்செயலாக நடந்த சம்பவம் என்றாலும் ஹாக்கி அணியினருக்கு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
ஆண்களுக்கான ஹாக்கி உலக லீக் போட்டிகள் நவம்பர் 27-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடைபெறுகிறது.