ராஜகீர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இன்று முதல் தொடங்கி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வரை பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெறுகிறது. மூன்று முறை சாம்பியன் ஆன இந்திய அணி இந்த தொடரில் தகுதி பெற வேண்டுமென்றால் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும்.
இந்தத் தொடரில் ஓமன் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விலகியதை அடுத்து வங்கதேசம் மற்றும் கஜகஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடருக்கு திரும்பியது. இந்த நிலையில் தரவரிசையில் 23 வது இடத்தில் உள்ள சீன அணியுடன் இந்தியா மோதியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி கோல் அடிக்கும் சில வாய்ப்புகளை வீணடித்தது. இதன் அடுத்து போட்டியின் 13-வது நிமிடத்தில் சீனாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அந்த அணி கோலாக மாற்றியது. இதை அடுத்து ஆட்டத்தின் 17 வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜூகரஜ் சிங் அடித்த கோல் மூலம் ஸ்கோர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமனானது.
இதை அடுத்து அடுத்த இரண்டாவது நிமிடத்திலே இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரித் அபாரமாக ஒரு கோல் அடிக்க இந்தியா இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதேபோன்று போட்டியின் 33 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்பிரித் சிங் கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.
இதனால் இந்தியாவின் வெற்றி எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீன அணி அபாரமாக விளையாடியது. ஆட்டத்தின் 35 வது நிமிடத்தில் சீன அணி இரண்டாவது கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதை அடுத்து போட்டியின் 41 வது நிமிடத்தில் சீனா மேலும் ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் மூன்றுக்கு மூன்று என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனால் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என உச்சக்கட்ட டென்ஷன் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆட்டத்தின் 47-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரித் மீண்டும் ஒரு கோலை அடித்து ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி நான்குக்கு மூன்று என முன்னிலை பெற்றது. கடைசி ஏழு நிமிடங்களில் சீன அணி கோல் அடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டது.
இதைப் போன்று இந்திய அணியும் கடைசி சில நிமிடங்களில் கிடைத்த கோல் வாய்ப்பை வீணடித்தது. இதனால் ஆட்டம் நான்குக்கு மூன்று என்ற கணக்கில் இந்தியாவுக்கு சாதகமாக முடிவடைந்தது. இன்றைய ஆட்டத்தில் அடிக்கப்பட்ட ஏழு கோல்களும் பெனால்டி கார்னர் வாயிலாக தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி நாளை ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.