ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி நான்காவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கு இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றிருக்கிறது.
பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி கொரியாவை எதிர்கொண்டது. இந்த தொடரில் தோல்வியை தழுவாத இந்திய அணி தென் கொரியாவை இன்று எதிர் கொண்டது. தொடக்கம் முதலே இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடியது.

ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே இந்திய வீரர் சுகுஜித் சிங் அபாரமாக கோலடிக்க இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இது போன்ற ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. ஆனால் இந்திய வீரர்கள் அதனை கோலாக மாற்ற தவறவிட்டனர். இந்த நிலையில் போட்டியின் 28 வது நிமிடத்தில் இந்திய வீரர்கள் கூட்டு முயற்சி ஒன்றில் ஈடுபட்டனர்.
கேப்டன் ஹர்மன்பிரித், சஞ்சய் ஆகியோர் பந்தை கடத்தி கொடுக்க அதனை தில்பிரீத் சிங் அபாரமாக அடித்து கோலாக மாற்றினார். இதன் மூலம் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முதல் பாதியை நிறைவு செய்தது. இந்த நிலையில் கொரிய அணி பதில் கோல் அடித்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாடியது.
ஆனால் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆக்ரோஷம் காட்டியதால் கொரிய அணியால் எதுவும் செய்ய முடியவில்லை. எனினும் கோல் கணக்கை அதிகமாக்கும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இந்த தருணத்தில் ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்பிரீத் சிங், தனது இரண்டாவது கோலை அடிக்க இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனால் கடைசி 15 நிமிடத்தில் கொரிய அணி கடுமையாக போராடியும் இந்திய அணியின் தற்காப்பு ஆட்டத்தை வீழ்த்த முடியவில்லை. தொடர்ந்து இந்திய அணி பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கொரிய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனை பயன்படுத்தி இந்திய அணி 50-வது நிமிடத்தில் நான்காவது கோல் அடித்தது. எனினும் அடுத்த நிமிடத்தில் கொரிய அணி தங்களது முதல் கோலை அடித்தது. ஆனால் அதற்குப்பின் கொரிய அணியால் மேலும் கோல்களை அடிக்க முடியவில்லை.
இதன் மூலம் முடிவில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் இறுதிப்போட்டியில் வென்று நான்காவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. கடந்த மூன்று ஆட்டங்களில் மட்டும் இந்திய அணி 15 கோல்களை அடித்திருக்கிறார்கள். வெறும் இரண்டு கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள். ஹர்மன்பிரித் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு ரசிகர்களின் இதயத்தை வென்றிருக்கிறது.