குவாண்டன்: ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பரம வைரியான பாகிஸ்தானை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணிக்கு மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி அரையிறுதி போட்டி மலேசியாவின் குவாண்டன் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென்கொரிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தியா, தென்கொரியா அணிகள் தலா 2 கோல்கள் அடித்திருந்தன. இதனால் பெனால்டி ஷூட் அவுட் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் 5-4 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை இந்தியா அசத்தலாக வீழ்த்தியது. இதனால் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானும் மலேசியாவும் மோதின. இதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து பாகிஸ்தானை இந்திய அணி இறுதிப் போட்டியில் இன்று எதிர்கொண்டது. நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை தொடக்கத்துக்கு பதிலடியாக இந்திய ஹாக்கி வீரர்கள் ரூபிந்தர் பால், யூசுப் அபான் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்களைப் போட்டு சமன் செய்தனர்.
இந்திய அணியின் திம்மையா அதிரடியாக 3-வது கோலடித்தார். ஆனால் பாகிஸ்தான் வீரர்களால் எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதனால் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது.
ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக இந்தியா வென்றுள்ளது. இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி, டெண்டுல்கர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.