சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இன்று இரவு நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பலவீனமான சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது. பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் போராடி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதன்பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

அதேபோல் நடப்பு சாம்பியன் தென் கொரியா உடனான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதுமட்டுமல்லாமல் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதிக்கும் முன்னேறியது. 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் லீக் சுற்றில் ஒருமுறை விளையாட வேண்டும்.
அந்த லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். அந்த வகையில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. மீதமுள்ள இரு இடங்களுக்கு பாகிஸ்தான், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகள் போராடி வருகின்றன. சீனா அணி 3 போட்டிகளில் தோல்வியடைந்ததால், அரையிறுதிக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் இன்று நடக்கவுள்ளன. அதில் சர்வதேச ஹாக்கி தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இந்திய அணியை எதிர்த்து 16வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். செஸ் ஒலிம்பியாட்-க்கு பின் சென்னையில் நடத்தப்படும் சர்வதேச போட்டி என்பதால், இந்தப் போட்டியை தமிழக ரசிகர்கள் பலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வருவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.