ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி உஸ்பெகிஸ்தானை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருக்கிறது. சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கலந்து கொள்ளவில்லை.
உஸ்பெகிஸ்தான் அணி பலம் குன்றியது என்றாலும் இந்த அளவுக்கு தோல்வியை தழுவும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆட்டம் தொடங்கியதிலிருந்து இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணியின் லலித் மற்றும் வருண் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடிக்க முதல் பகுதியில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.இதன் பிறகு அபிஷேக் மற்றும் மந்திப் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் கோல் அடிக்க இந்திய அணியின் ஸ்கோர் 4க்கு பூஜ்யம் என்ற கணக்கில் உயர்ந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதி முடிவதற்குள் லலித் மற்றும் சுகஜித் கோல் அடித்தனர்.

இந்திய அணியில் மந்தீப் சிங் ஹாட்ரிக் கோல் அடிக்க ஆட்டத்தின் முதல் 30 நிமிடத்தில் இந்திய அணி ஏழுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதனை அடுத்து ஆட்டத்தின் மூன்றாவது பகுதியில் கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை வருண் கோலாக, மாற்ற பின் சுகுஜித் மற்றும் ரோகி தாஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடிக்க இந்திய அணி பத்துக்கு பூஜ்ஜியம் என முன்னிலை வகித்தது.
இதேபோன்று வருண் தனது மூன்று மற்றும் நான்காவது கோலை அடிக்க இந்தியாவின் ஸ்கோர் 14 க்கு 0 என்ற கணக்கில் உயர்ந்தது. மீண்டும் லலித் மற்றும் சஞ்சய் கோல் அடிக்க ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 16 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அதிகபட்சமாக வருண் குமார் 4 கோல்களையும் லலித் குமார் மற்றும் மந்தீப் சிங் தலா மூன்று கோல்களையும் அடித்தார்கள்.
இந்த தொடரில் இந்திய அணி தங்கப் பதக்கம் என்றால் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறலாம். இந்திய அணி ஆசிய கோப்பையில் 1966 மற்றும் 1988 மற்றும் 2014 ஆம் ஆண்டு மூன்று தங்க பதக்கத்தை வென்றிருக்கிறது. இந்த தொடரில் நான்காவது தங்கப் பதக்கத்தை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.