புவனேஸ்வர்: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், இன்று நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதவுள்ளன. எனவே ஆட்டத்தில் அனல் பறக்கும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ஹாக்கி தரவரிசையில் எட்டு இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் தொடக்கத்தில் இரண்டு தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி மீண்டு வந்தது. காலிறுதியில் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை மண்ணை கவ்வ செய்து, அரையிறுதிக்கு முன்னேறியது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இதே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி போட்டியை வென்று விட்டால், 2012ம் ஆண்டு இதே தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்து, வெண்கலத்தை நழுவ விட்டதற்கு பதிலடி கொடுத்து, திருப்தி அடைந்து கொள்ளலாம்.
சொந்த மண் மற்றும் ரசிகர்களின் உற்சாகம் இந்திய அணிக்கு சாதகம். இந்திய அணி பங்கேற்கும் அனைத்து ஆட்டங்களிலும் 7,000க்கும் குறைவில்லாமல் ரசிகர்கள் திரண்டு உற்சாகம் அளிக்கின்றனர். அடுத்த விஷயம், பாகிஸ்தான் இந்தத் தொடரின் குரூப் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது.
அதோடு, சமீபத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தானைத் தோற்கடித்து, தங்கம் வென்றதோடு, 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடித் தகுதி பெற்றது இந்தியா. அந்த ஆட்டத்தில் வெற்றி பெனால்டி ஷூட் அவுட் முறையில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த முறை அதற்கு இடம் அளித்து விடக் கூடாது. நிர்ணியக்கப்பட்ட 60 நிமிடத்துக்குள்ளேயே கோல்கள் அடிக்க வேண்டும். அதோடு, மற்ற அணிகளுக்கு எதிராக எப்படியோ, இந்தியா என்றால் பாகிஸ்தான் வீறு கொண்டு எழும் என்பது நிதர்சனம். எனவே, தொடக்கத்தில் இருந்தே ஆக்ரோஷமாக ஆட வேண்டும்.
இரு அணிகளும் இதற்கு முன்பு பலமுறை மோதியுள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் ஆறு போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு இந்த இரு அணிகள்தான் முன்னேறியுள்ளன. 1956 முதல் 1964 வரையிலும் ஒலிம்பிக் இறுதி ஆட்டங்களிலும் இந்தியா, பாகிஸ்தான் மோதியுள்ளன. இவை அனைத்திலும் பெரும்பாலும் பாகிஸ்தானின் கையே ஓங்கியிருந்தது.
ஆனால் தற்போதைய சூழலைப் பார்த்தால் இந்தியாவின் ஆட்டம் மெருகேறி இருப்பதால், பாகிஸ்தானை வீழ்த்தும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை.