டெல்லி: 2026 காமன்வெல்த் விளையாட்டில் இருந்து ஹாக்கி விளையாட்டு முற்றிலுமாக நீக்கப்பட்டு இருக்கிறது. அந்தத் தொடரில் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் ஹாக்கி விளையாட்டு நீக்கப்பட்டிருப்பது இந்திய ஹாக்கி வீரர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி இந்திய ஹாக்கி அணியின் தற்காப்பு வீரர் ஜர்மன்பிரீத் சிங் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் மைகேல் தளத்திற்கு அளித்த பிரத்தியாக பேட்டியில் ஹாக்கி விளையாட்டை மீண்டும் காமன்வெல்த்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

2024 ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது. தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்று இருக்கும் நிலையில் 2026 காமன்வெல்த் விளையாட்டில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், தற்போது காமன்வெல்த்தில் ஹாக்கி விளையாட்டு நீக்கப்பட்டு இருக்கிறது.
இது பற்றி ஜர்மன்பிரீத் சிங் மைகேல் செய்தியாளரிடம் பேசுகையில், "இது நிச்சயமாக எனக்கு ஏமாற்றமாக உள்ளது. காமன்வெல்த் விளையாட்டில் ஹாக்கி ஒரு முக்கியமான விளையாட்டாக இருந்தது. இந்திய வீரர்கள் அந்த தொடரில் பங்கு பெற ஆர்வமாக இருந்தார்கள். காமன்வெல்த் தொடரை நிர்வகிப்பவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். காமன்வெல்த் விளையாட்டில் ஹாக்கி மீண்டும் சேர்க்கப்பட நிச்சயமாக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்." என்று ஜர்மன்பிரீத் சிங் கூறினார்.
இந்தியா தற்போது ஜெர்மனிக்கு எதிரான ஹாக்கி தொடரில் விளையாட உள்ளது. எனவே, இப்போதைக்கு இந்திய ஹாக்கி அணி அந்தத் தொடரில் கவனம் செலுத்த இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ஃபுல்டன் தெரிவித்திருக்கிறார். அவர் பேசுகையில், "என்ன நடந்ததோ அது நடந்து விட்டது. அதே சமயம் நாங்கள் ஜெர்மனிக்கு எதிரான தொடரில் விளையாடுவதை பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். காமன்வெல்த் அதன்பின் வருவது. எனவே, இப்போதைக்கு நாங்கள் ஜெர்மனி தொடரில் கவனம் செலுத்தி வருகிறோம்." என்றார்.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஜர்மன்பிரீத் சிங் இது பற்றி பேசுகையில், "எனக்கு இப்போதுதான் இந்த தகவல் தெரிந்தது. நானும், அணியின் பயிற்சியாளரும் ஒரே முடிவில் தான் இருக்கிறோம். இப்போதைக்கு நாங்கள் ஜெர்மனியுடனான போட்டிகளில் கவனம் செலுத்த இருக்கிறோம். காமன்வெல்த் விளையாட்டு பெரிய தொடர் என்பதால் அதில் தங்கப் பதக்கம் வெல்வதற்கு நாங்கள் இலக்கு நிர்ணயித்து இருந்தோம். துரதிஷ்டவசமாக அது இப்போது நடக்க வாய்ப்பு இல்லாமல் போய் உள்ளது. இது எங்கள் கைகளில் இல்லை. அதனால் எங்களால் செய்வதற்கு ஒன்றுமில்லை." என்றார்.