பெங்களூர் : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விளையாட்டு மிகவும் பிரபலமாக இருக்கும் கிரிக்கெட்டில் மும்பை எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதே போல் ஹாக்கியில் கர்நாடகா ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
இந்திய அணியின் சிறந்த வீரர்கள் எல்லாம் ஒரு காலத்தில் கர்நாடகாவில் இருந்து தான் வந்தார்கள். 90களில் எல்லாம் இந்திய ஹாக்கி அணியில் குறைந்தபட்சம் ஐந்து கர்நாடகா வீரர்கள் இடம் பிடித்திருப்பார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழ் மாறிவிட்டது.

2016 ரியோ ஒலிம்பிக் பிறகு கர்நாடகாவில் இருந்து ஒருவர் கூட இந்திய ஒலிம்பிக் ஹாக்கி அணியில் தகுதி பெற்றது கிடையாது. கர்நாடகாவை சேர்ந்த எஸ்வி சுனில் என்ற வீரர் கூட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து இறுதி அணியில் அதிரடியாக நீக்கப்பட்டார். இப்படி ஒரு காலத்தில் கில்லி போல் இருந்த கர்நாடகா ஹாக்கி அணி தற்போது சல்லி சலியாக நொறுக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடகாவில் சேர்ந்த சுப்பையா என்ற முன்னாள் ஹாக்கி வீரர், கர்நாடகாவில் அடித்தள ஹாக்கி பயிற்சி மையம் தற்போது மோசமான நிலையில் இருப்பதால் புதிய வீரர்கள் இங்கு கிடைப்பதில்லை என தெரிவித்திருக்கிறார். புல் தரையில் விளையாடுவதன் மூலம் கிடைக்கும் திறன் செயற்கை ஆடுகளத்தில் எதிரொளிப்பதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கர்நாடகாவில் உள்ள கூர்க் பகுதியில் மட்டும் மூன்று சிந்தடிக் ஆடுகளம் இருந்ததாகவும் தற்போது மூன்றுமே மோசமான நிலையில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் கர்நாடகா வீரருமான கணேஷ் தெரிவித்து இருக்கிறார். இங்கு அமைக்கப்பட்டுள்ள இரண்டு ஆடுகளம் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக மாறிவிட்டது, என்றும் இன்னொரு ஆடுகளம் 8 ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பிட்டுள்ள கணேஷ், இதனை உடனடியாக மாற்றி புதிய ஆடுகளம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய சுப்பையா, கர்நாடகாவில் 31 மாவட்டங்கள் இருப்பதாகவும் அதில் குறைந்தபட்சம் 12 சின்தடிக் ஹாக்கி ஆடுகளம் இருந்தால் மட்டுமே மீண்டும் தங்களது பகுதியில் ஹாக்கி உயிர்த்தெழும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதேபோன்று பெங்களூரில் உள்ள ஹாக்கி மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் மற்ற வீரர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் சுப்பையா குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் ஹாக்கி விளையாட்டு தற்போது மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ள சுப்பையா அதற்கு ஏற்றார் போல் உள்ளூர் பயிற்சியாளர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சுப்பையா வலியுறுத்தியுள்ளார். இன்னும் ஆரம்ப கட்ட அளவில் பழைய பயிற்சிகளும் நுணுக்கங்களும் மட்டும்தான் சொல்லி த் தரப்பட்டு வருவதாகவும் வீரர்கள் போட்டியில் விளையாடிவிட்டு பின் அதிலிருந்து மீண்டு உடல் தகுதியை எட்டுவதற்கான எந்த ஒரு பயிற்சியும் தற்போது சொல்லித் தரப்படவில்லை என்றும் சுப்பையா குறிப்பிட்டு இருக்கிறார்.
இதேபோன்று கர்நாடகாவில் இரண்டு ஹாக்கி அமைப்பு செயல்படுவதாகவும் அதில் ஒரு ஹாக்கி அமைப்பு மட்டும் தான் இந்திய ஹாக்கி சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள சுப்பையா, இப்படி இரு அமைப்புகள் செயல்படுவதன் மூலம் கர்நாடகாவில் ஹாக்கி வளர்ச்சி அடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது கர்நாடகாவில் இருந்து முகமது மோசீன் என்ற ஒரு ஹாக்கி வீரர் மட்டும் தான் இந்திய அணியில் இடம் பிடித்திருப்பதாகவும், ஆனால் அவர் கூட பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை என்றும் சுப்பையா கூறியிருக்கிறார். ஆனால் அண்மையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் முகமது மோசீன் இடம்பெற்றிருந்ததாக அவர் கூறியுள்ளார்.