டெல்லி: இந்திய ஹாக்கி அணியில் கோஷ்டி உருவாக்குகிறார் என்ற குற்றச்சாட்டின் கீழ் வீரர் குர்பஜ்சிங்குக்கு விதிக்கப்பட்ட 9 மாத தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் நடுகள வீரர் குர்பஜ்சிங். சர்வதேச போட்டிகளில் ஆடிய அவர் மீது அணியில் கோஷ்டி உருவாக்குகிறார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனால் குர்பஜ்சிங்கின் நடவடிக்கைகளை கண்காணிக்க முன்னாள் பயிற்சியாளர் ஜூட் பெலிக்ஸ் நியமிக்கப்பட்டார். பெல்ஜியத்தில் நடந்த உலக ஹாக்கி லீக் அரை இறுதி சுற்று உள்பட 3 போட்டிகளில் குர்பஜ்சிங் நடவடிக்கைகள் குறித்து ஹாக்கி இந்தியா அமைப்பிடம் அவர் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் குர்பஜ் சிங்குக்கு 9 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. 2016 மே 9-ந் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட இந்த தடையால் ஹாக்கி இந்தியா, ஆசிய ஹாக்கி பெடரேஷன், சர்வதேச ஹாக்கி பெடரேஷன் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் குர்பஜ்சிங் விளையாட முடியாது என்ற நிலை ஏற்பட்டது. 2016-ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் அவர் பங்கேற்பதில் சிக்கலானது.
இது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின், குர்பஜ்சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் குர்பஜ் சிங் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது ஹாக்கி இந்தியா அமைப்பு.