டெல்லி: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங், தரம்வீர் சிங் மற்றும் மகளிர் ஹாக்கி அணியின் கோப் கீப்பர் சவிதா புனியா ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்க வேண்டும் என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டும் வகையிலும் அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு, பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் வீரர், வீராங்கனைகளின் பெயர்களை பரிந்துரை செய்து வருகின்றன.
அதன்படி, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தனது பரிந்துரையை தற்போது அனுப்பியுள்ளது. அதில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்த மன்பிரீத் சிங், தரம்வீர் சிங் மற்றும் மகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் சவிதா புனியா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
நடுகள வீராரன தரம்பீர் சிங், 2014 ஆசியக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். 2012 லண்டன் ஒலிம்பிக், 2014 உலகக் கோப்பை போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
200க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள மன்பிரீத் சிங், இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றதில் மிக முக்கியப் பங்கு அவருக்கு உண்டு. 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
மகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பரான சவிதா புனியா, கடந்தாண்டு இந்தியா ஆசியக் கோப்பை வென்றதில் முக்கிய பங்கு பெற்றார். பைனல்ஸில் மிகவும் வலுவான சீனாவின் கோலடிக்கும் வாய்ப்புகள் தடுத்து கோப்பை வென்று தந்தார். 36 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
இவர்களைத் தவிர முன்னாள் வீரர் சங்காய் இபெம்ஹால் சானு, முன்னாள் கேப்டன் பாரத் சேத்ரி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்காக தயான் சந்த் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஹாக்கி பயிற்சியாளர் பிஎஸ் சவுகானுக்கு சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.