டெல்லி: இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் டெர்ரி வால்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை கைவிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது ஹாக்கி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டெர்ரி வால்ஸ் இதற்கு முன்பு அமெரிக்க பெண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளராக பதவி வகித்தவர். இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளராக வால்ஸ் நியமிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது.

அதே நேரம் வால்ஸ் மீது வேறு ஒரு வகையில் சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து ஹாக்கி-இந்தியா அமைப்பின் தலைவர் நரிந்தர் பத்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், அமெரிக்காவில் பெண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளராக வால்ஸ் பதவி வகித்தபோது, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதுகுறித்த ஆவணங்கள் என்னிடம் வந்து சேர்ந்துள்ளன. இதுகுறித்து இந்திய விளையாட்டு ஆணையத்திடம் தெரிவித்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளேன். இந்த சர்ச்சை குறித்து விளக்கமளிக்க டெர்ரி வால்சிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்" என்று கூறியிருந்தார்.
இதனிடையே கடந்த அக்டோபர் 19ம்தேதி வால்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். நிர்வாக நடைமுறைகளால் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று குற்றம்சாட்டி தனது பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார். ஆனால் விளையாட்டு ஆணையம், விளையாட்டு அமைச்சகம் போன்றவற்றின் முயற்சியால் மீண்டும் பணியை தொடர்ந்து வந்தார். இருப்பினும் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறவில்லை.
இந்நிலையில், தனது கோரிக்கைகளை நிறைவேற்றினால் பதவியில் தொடர தயார் என்று வால்ஸ் அறிவித்தார். இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் வால்சிடம் சுமார் ஆறு மணி நேரம் பேச்சு வார்த்தை நடந்தது. அது, தோல்வியுற்ற நிலையில், இன்று காலையில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோன்வாலை சந்தித்து டெர்ரி வால்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையின்போதும், வால்சின் கோரிக்கைகளை முற்றாக ஏற்க முடியாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதையடுத்து ராஜினாமா முடிவில் வாபஸ் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ள டெர்ரி வால்ஸ், நாளை ஆஸ்திரேலியா கிளம்புகிறார்.