டெல்லி : ஆடவர் ஹாக்கி அணிக்கு புதிய வெளிநாட்டு பயிற்சியாளரை தேடி வருகிறது ஹாக்கி இந்தியா. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதுவரை ஆறுக்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும், அதிக விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்த்து காத்துள்ளது ஹாக்கி இந்தியா அமைப்பு.
கடந்த ஆண்டு இறுதியில் ஒடிசாவின் புபனேஸ்வர் நகரத்தில் நடைபெற்ற ஹாக்கி உலகக்கோப்பையில் இந்திய அணி காலிறுதியுடன் வெளியேறியது. அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார்.
அப்போதிருந்தே அடுத்த பயிற்சியாளரை தேடும் பணி துவங்கியது. இப்போதைய சூழ்நிலையில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளை சேர்ந்த பயிற்சியாளர்கள் இந்திய அணிக்கு பயிற்சியளிக்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பயிற்சியாளர் நியமனத்திற்கான பணிகள் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கி, மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என கூறப்படுகிறது. இதற்கு காரணம், ஹாக்கி இந்தியா பயிற்சியாளரை முடிவு செய்த பின் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு கால தாமதம் ஆகலாம்.
அடுத்து ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளில் ஆட வேண்டிய சூழல் இருப்பதால் இந்திய ஹாக்கி அணி அதற்குள் பயிற்சியாளரை முடிவு செய்து களம் காண தயாராக வேண்டும்.
இந்தியாவை பார்த்து ஈயடிச்சான் காப்பி அடிக்கும் பாக். கிரிக்கெட்.. இங்க டிராவிட்.. அங்க யூனிஸ் கான்!