சென்னை: சென்னையில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதியில், இந்தியா, நடப்பு சாம்பியனும் ஏழு முறை கோப்பை வென்ற அணியுமான ஜெர்மனியிடம் 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தப் போட்டியின் மூலம், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனியர் உலகக் கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்தது. இந்தியா கடைசியாக 2016 ஆம் ஆண்டில் லக்னோவில் இக்கோப்பையை வென்றிருந்தது.
இந்தியா தற்போது வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொள்ளும். முதல் அரையிறுதியில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயினை இறுதி போட்டியில் ஜெர்மனி சந்திக்கும்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது. ஆனால், ஆட்டம் முன்னேற முன்னேற ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. 8வது நிமிடத்தில் பென் ஹாஸ்பாக்கின் கோல் முயற்சியை இந்திய கோல்கீப்பர் பிரின்ஸ்டீப் சிங் திறம்பட தடுத்தார்.
14வது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் லூகாஸ் கோசெல் ஜெர்மனிக்கு முதல் கோலை அடித்தார். அடுத்த ஒரு நிமிடத்திலேயே கோசெல் கடத்திய பந்தை டைட்டஸ் வெக்ஸ் கோலாக மாற்றி முன்னிலையை 2-0 என இரட்டிப்பாக்கினார்.
முதல் பகுதி முடிவில் ஜெர்மனி 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பகுதி இறுதி 11 வினாடிகளில், லூகாஸ் கோசெல் தனது இரண்டாவது பெனால்டி கார்னர் கோலை அடிக்க, இடைவேளையின்போது ஜெர்மனி 3-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது.
மூன்றாம் பகுதி தொடங்கிய மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, சௌரப் ஆனந்த் குஷ்வாஹா காலியான கோல் போஸ்டடக்கு எதிராகப் பந்தை தவறவிட்டதால், இந்தியா ஒரு நல்ல வாய்ப்பை இழந்தது. ஜெர்மனி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, 40வது நிமிடத்தில் ஜோனாஸ் வான் கெர்ஸம் மூலம் நான்காவது கோலை ஜெர்மனி அடித்தது.
49வது நிமிடத்தில், ஹாஸ்பாக் ஒரு 'டைவிங்' கோலாக மாற்றி, 5-0 என ஜெர்மனி முன்னிலையை அதிகரித்தார். 51வது நிமிடத்தில் அன்மோல் எக்கா ஒரு பெனால்டி கார்னர் கோலை அடித்து இந்தியாவுக்கு ஆறுதல் அளித்தார். ஆனால், அதற்குள் ஆட்டத்தின் போக்கு ஜெர்மனி வசமாகியிருந்தது. இதனால், இந்தியா வெல்லும் என எதிர்பார்த்த தமிழக ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.