புவனேஸ்வர்: புவனேஸ்வரில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தில் சட்டையை கழற்றி, அசிங்கமான செயல்களில் ஈடுபட்டனர்.
சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதிப் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் இந்திய அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

போட்டியை வென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தில் தங்களின் சட்டையை கழற்றி சுற்றினர். மேலும் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டியதுடன், அசிங்கமாக திட்டினர். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்கள் அணி வீரர்களை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் ஷெனாஸ் ஷேக் செய்த முயற்சி தோல்வி அடைந்தது. அணி வீரர்களின் நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்குமாறு செய்தியாளர்கள் ஷேக்கிடம் கேட்டனர்.

அதற்கு அவர் கூறுகையில்,
நடந்த சம்பவத்திற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் குழந்தைகள் போன்று நடந்து கொண்டனர். நான் என்ன செய்ய முடியும் என்றார்.