பெங்களூர் : இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது கர்நாடகா காவல்துறை போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் மீது கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்து இருக்கிறார்.
இந்திய ஹாக்கி அணியில் தடுப்பாட்டக்காரராக இருக்கிறார் வருண் குமார். மேலும், ஹாக்கி இந்தியன் லீக் தொடரில் பஞ்சாப் வாரியர்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார். அவர் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில் வசித்து வருகிறார்.

அவர் மீது பாதிக்கப்பட்டு இருக்கும் பெண் அளித்து இருக்கும் புகாரில் தான் 17 வயதாக இருந்த போதில் இருந்து வருண் குமார் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், தன்னை திருமணம் செய்வதாக கூறி ஐந்து ஆண்டுகளில் தன்னிடம் பல முறை அத்துமீறியதாகவும் கூறி இருக்கிறார்.
கடந்த 2019இல் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் தன்னை வருண் குமார் தொடர்பு கொண்டதாகவும், அப்போது முதல் ஐந்து ஆண்டுகளாக தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டு இருக்கிறது.
வருண் குமார் அந்த பெண் 17 வயதாக இருக்கும் போதே அவரிடம் தவறாக நடந்த கொண்டதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. பெங்களூர் ஞானபர்த்தி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில், கர்நாடகா மாநில காவல்துறையின் குழு ஒன்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் சென்று வருண் குமாரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.