புபனேஸ்வர் : ஹாக்கி உலகக்கோப்பை குரூப் சுற்றில் இந்தியா, கனடாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஹாக்கி உலகக்கோப்பை 2018 தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.
அதில் "சி" பிரிவில் இந்தியா - கனடா இடையே ஆன போட்டி இன்று (டிசம்பர் 8) நடைபெற்றது.
இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் கனடாவுடன் 5 போட்டிகளில் பங்கேற்று இருந்தது. அதில் 3 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா செய்து இருந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கணிக்கப் பட்டது.
இந்தியா - கனடா போட்டியில் முதல் கால் பகுதியில் இந்தியா 1 கோல் அடித்தது. கனடா மூன்றாம் கால் பகுதியில் 1 கோல் அடித்து சம நிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றது.
இந்தியா முந்தைய சில போட்டிகளில் கடைசி நிமிடங்களில் எதிரணியை கோல் அடிக்க விட்டு இருந்ததால், இந்திய அணியிடையே ஒரு பரபரப்பு காணப்பட்டது. எனினும், தடுப்பாட்டம் ஆடாமல், தாக்குதல் பாணி ஆட்டத்தை கையில் எடுத்தது இந்தியா.
கடைசி கால் பகுதியில் 4 கோல்கள் அடித்து கனடா அணியை திகைக்க வைத்தது. போட்டியின் இறுதியில் இந்தியா 5-1 என வெற்றி பெற்றது. கனடா கடைசி கால் பகுதியில் மொத்தமாக போட்டியை கோட்டை விட்டது.
இந்த வெற்றியின் மூலம் சி பிரிவில் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது. பெல்ஜியம் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.