புவனேஸ்வர் : இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதிய ஹாக்கி உலகக்கோப்பை குரூப் சுற்றி போட்டி டிராவில் முடிந்தது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடை பெற்று வரும் ஹாக்கி உலகக்கோப்பை தொடரில் இந்தியா தன் இரண்டாவது குரூப் சுற்று போட்டியில் பெல்ஜியம் அணியை சந்தித்தது.
இந்தியா முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை 5-0 என வீழ்த்தி நம்பிக்கையுடன் இருந்தது. காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற இந்திய அணி பெல்ஜியம் அணியை வெல்ல வேண்டும் என்ற நிலையில் போட்டியில் பங்கேற்றது.
போட்டி துவங்கிய எட்டாவது நிமிடத்தில் பெல்ஜியம் அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. போட்டியின் பாதி நேரம் வரை இந்தியா கோல் அடிக்க முடியாமல் திணறி வந்தது.
39வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மன்ப்ரீத் சிங் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
சிம்ரன்ஜீத் 46வது நிமிடத்தில் கோல் அடிக்க இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். எனினும், 56வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் சைமன் கோல் அடித்து இந்திய அணியின் வெற்றியை பறித்தார். இந்தியா - பெல்ஜியம் இடையே ஆன போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.
கடைசி 5 நிமிடங்களில் இந்தியா எதிரணி கோல் அடிக்க விடுவது தொடர்ந்து வருகிறது. இதனால், தற்போது இந்தியா காலிறுதிக்கு எளிதாக தகுதி பெறும் போட்டியை 2-2 என டிரா மட்டுமே செய்துள்ளது.
இந்தியா - பெல்ஜியம் அணிகள் பங்கேற்றுள்ள "சி" பிரிவில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் தலா நான்கு புள்ளிகளுடன் இருக்கின்றன. ஒரே புள்ளிகளை பெற்று இருந்தாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்தியா பெல்ஜியம் அணியை முந்தி முதல் இடம் பிடித்துள்ளது.