ஹாக்கி உலககோப்பை: நெதர்லாந்திடம் இந்திய ஆடவர் அணி தோல்வி.. அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா?
ஆம்ஸ்டல்வீன்: 2026 ஆம் ஆண்டுக்கான FIH ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையின் குரூப் 'ஈ' பிரிவின் விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்திடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீனில் உள்ள வாக்னர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா களம் இறங்கியது.
கோப்பையை நடத்தும் நாடான நெதர்லாந்துக்கு எதிராக தொடக்கம் முதலே இந்திய அணி கடுமையான சவாலை அளித்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. குறிப்பாக, இரண்டாவது குவார்ட்டரில் இந்திய வீரர் தில்பிரீத் சிங்கிற்கு கிடைத்த ஒரு பொன்னான கோல் வாய்ப்பு நழுவியது.

அதே நேரத்தில், இந்திய கோல்கீப்பர் மோஹித் நெதர்லாந்தின் கோல் முயற்சிகளை லாவகமாக தடுத்து நிறுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என சமநிலையில் முடிந்தது.இப்போட்டியைக் நேரில் காண கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட், ஸ்டீவ் வாக் மற்றும் ஹாக்கி நட்சத்திரங்களான ஜேமி டுவயர், டீன் டி நூய்ஜர் ஆகியோர் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் மூன்றாவது பகுதியில் ஆட்டம் சூடுபிடித்தது. ஆட்டத்தின் மூன்றாவது பகுதியில் 11-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி தனது முதல் கோலை அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து, நான்காவது பகுதியில் 6-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மற்றொரு கோல் அடிக்க, அந்த அணி 2-0 என வலுவான நிலையை எட்டியது.
இதன்பின்னர் ஆட்டத்திற்குள் மீண்டு வர போராடிய இந்திய அணிக்கு, கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். இதன் மூலம் ஆட்டம் 1-2 என மாறியது. இந்த உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் அடித்த 6-வது கோல் இதுவாகும். ஆனால், இந்தியாவின் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் இந்திய தற்காப்பு வீரர்கள் செய்த தவறால், நெதர்லாந்து அணி தனது 3-வது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தது. இறுதியில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட கேள்விகுறியாகி இருக்கிறது. வரும் திங்கட்கிழமைக்கு அர்ஜென்டினா எதிரான போட்டியில் இந்தியா வென்றே ஆக வேண்டும். ஒரு வேலை இங்கிலாந்து அணி தங்களின் 2 போட்டியிலும் வென்றால், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பே இந்தியா வெளியேறிவிடும்.


Click it and Unblock the Notifications

