மும்பை: மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் வரும் செவ்வாய்க்கிழமை பலப் பரீட்சை நடத்த உள்ளது. ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு கிரிக்கெட் களத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகள் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடந்தது.
களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் கைகுலுக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும் அந்நாட்டின் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மாட்டோம் என்று இந்தியா மறுத்து பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இந்த நிலையில் கிரிக்கெட்டை தொடர்ந்து தற்போது ஹாக்கி போட்டியில் இரு அணிகளும் முதல் முறையாக ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பல பரீட்சை நடத்த உள்ளது. கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை போல் இல்லாமல் ஹாக்கியில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தங்களது அணியினரை அனுப்பவில்லை.
இதனால் வங்கதேசம் அணி மாற்று அணியாக பங்கு பெற்றது. தற்போது இந்த தொடர் மலேசியாவில் நடைபெறுவதால் பாகிஸ்தான் இந்த தொடரில் பங்கேற்கிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு வீரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.
அதில் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத விஷயத்தில் ஈடுபட வேண்டாம். இந்திய வீரர்கள் கைகுலுக்க வில்லை என்றால் நீங்களும் கைகுலுக்க வேண்டாம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். மலேசியாவுக்கு எதிராக முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி ஏழுக்கு ஒன்று என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது.
தற்போது இரண்டாவது போட்டியில் பிரிட்டன் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.தற்போது மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியாவுடன் பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்துகிறது.