சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனான தென் கொரியா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பலவீனமான சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது. பின்னர் இரண்டாவது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் போராடி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதன்பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்த நிலையில் பலம் வாய்ந்த அணியான நடப்பு சாம்பியன் தென் கொரியாவை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்திய அணி ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து அசத்தியது. தென் கொரியா வீரர்களின் வலிமையான டிஃபென்ஸை உடைத்து சுக்ஜித் பந்தை உள்ளே கொண்டு சென்று கட் செய்ய, அதனை நீலகண்ட சர்மா கோலாக்கி அசத்தினார்.
ஆனால் இந்திய அணியின் இந்த முன்னிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 12வது நிமிடத்திலேயே தென் கொரியா அணியின் கிம் கோல் அடிக்க, 1-1 என்ற நிலை ஏற்பட்டது. இதன்பின் முதல் 15 நிமிட ஆட்டம் முடிவடைந்தது. பின்னர் தொடங்கிய 2வது 15 நிமிட ஆட்டத்தில், 23வது நிமிடத்தில் இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் இரண்டாவது கோலை அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். பின்னர் 3வது குவார்ட்டர் நேரத்தில் இந்திய அணியின் மன்தீப் பேக் ஹாண்ட் கோல் ஒன்றை அசத்தலாக அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.
பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக இரு அணிகளாலும் கோல் அடிக்கப்படவில்லை. இதையடுத்து கடைசி 15 நிமிட ஆட்டம் தொடங்கியது. இதன் தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை மிஸ் செய்தது. இதன்பின் கோல் அடிக்க தென் கொரியா தீவிரமாக விளையாடியது. அதன் பலனாக 58வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் ஜிஹுன் யாங் அசாத்திய கோல் ஒன்றை அடித்தார். இதனால் ஆட்டத்தில் 3-2 என்ற நிலை ஏற்பட்டது.
இதன்பின் இந்திய அணி கோல் அடிக்காமல் நேரத்தை கடத்தும் பணிகளில் ஈடுபட்டது. இறுதியாக இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான தென் கொரிய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளதோடு, புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.