கடைசி சாம்பியன்ஸ் கோப்பை நமக்கு கிடைக்குமா?
டெல்லி: ஹாக்கி விளையாட்டில் மிகவும் முக்கியமான போட்டிகளில் ஒன்றான சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நெதர்லாந்தில் நடக்க உள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானுடன் இந்தியா மோத உள்ளது.
பாகிஸ்தான் முயற்சியால் உருவாக்கப்பட்ட சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, 1978 முதல் விளையாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடந்து வந்த இந்தப் போட்டி, 2014ல் இரண்டாண்டுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டது.

உலக ஹாக்கி கூட்டமைப்பின் முடிவின் படி, ஹாக்கி உலக லீக் போட்டிகள், 2019ல் துவங்க உள்ளது. அதையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை போட்டி கைவிடப்படுகிறது.
37வது சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நெதர்லாந்தின் பிரடா நகரில், ஜூன் 23ல் துவங்குகிறது. இதில் முதல் நாளில் நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
அதன்பிறகு, ஜூன் 24ல் ஆர்ஜென்டீனா, 27ல் ஆஸ்திரேலியா, 28ல் பெல்ஜியம் அணிகளுடன் இந்தியா விளையாட உள்ளது.
நவம்பர் இறுதியில் புவனேஸ்வரில் நடக்க உள்ள உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நடக்கும் சர்வதேச போட்டி என்பதால், இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் கடைசி போட்டி என்பதால், இதில் பட்டம் வெல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக இருக்கும்.
இந்தப் போட்டியில் இந்தியா இதுவரை மிகவும் அதிகபட்சமாக 2016ல் இரண்டாவது இடத்தைப் பிடித்து. 1982ல் மூன்றாவது இடத்தையும், 1983, 1996, 2002, 2003, 2004, 2012, 2014 என ஏழு முறை நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.
தற்போதுள்ள இந்திய அணி மிகவும் வலுவாக உள்ள நிலையில், கடைசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்று வரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 14 முறையும், ஜெர்மனி 10 முறையும், நெதர்லாந்து 8 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் கோப்பையை வென்றுள்ளன.
Story first published: Friday, March 16, 2018, 12:00 [IST]
Other articles published on Mar 16, 2018


Click it and Unblock the Notifications