டெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணியைச் சேர்ந்த ரஞ்சிதா தேவி என்ற வீராங்கனை பயிற்சியாளர், வீடியோகிராபர் மற்றும் பயிற்சிப் பிரிவைச் சேர்ந்த அனைவர் மீதும் செக்ஸ் தொல்லை தந்து கடுமையாக மன உளைச்சலை ஏற்படுத்தியதாக புகார் கொடுத்தார். இதையடுத்து நடந்த விசாரணைக்குப் பின்னர் முதல் கட்டமாக வீடியோகிராபர் நீக்கப்பட்டுள்ளார்.பயிற்சியாளர் உள்ளிட்ட பிறர் மீது விசாரணை நடக்கவுள்ளது. இந்திய ஹாக்கி வட்டாரத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய ஹாக்கி நிர்வாகம் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. தேசிய விளையாட்டான ஹாக்கி ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தது. ஆனால் கிரிக்கெட்டின் வரவாலும், ஹாக்கியை சரிவர நிர்வகிக்காத காரணத்தாலும், இன்று அதலபாதாளத்தில் கிடக்கிறது. அதை சரி செய்யும் முயற்சிகள் கடுமையாக நடந்து வரும் நிலையில் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளால் ஹாக்கி மேலும் மேலும் அடி வாங்கி வருகிறது.இந்த நிலையில், மகளிர் அணியைச் சேர்ந்த வீராங்கனை, ரஞ்சிதா தேவி தனக்கு பயிற்சியாளர் செக்ஸ் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஹாக்கி இந்தியா நிர்வாகத்திற்கு அவர் கொடுத்துள்ள புகார் கடிதத்தில், கனடா, சீனாவுக்கு சமீபத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சென்றிருந்தபோது, தலைமைப் பயிற்சியாளர் கெளசிக், வீடியோகிராபர் பசவராஜ் மற்றும் பயிற்சியாளர் குழுவில் இருந்த அனைவரும் என்னை ஆசைக்கு இணங்க வலியுறுத்தினார்கள். நான் மறுத்ததால் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் என்னைத் திட்டினார். அசிங்கமாக விமர்சித்தார்.நான் மட்டுமல்லாமல் அணியில் உள்ள பிற வீராங்கனைகளும் கூட இவர்களது செக்ஸ் டார்ச்சரால் பெரும் மன உளைச்சல் அடைந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.மிகக் கடுமையான இந்த புகாரைத் தொடர்ந்து ஹாக்கி இந்திய நிர்வாகம் நான்கு பேர் கொண்ட கமிட்டி ஒன்றை விசாரணைக்காக அமைத்தது. இந்த குழுவின் தலைவராக ராஜீவ் மேத்தா அறிவிக்கப்பட்டார். முன்னாள் வீரர்களான ஜாபர் இக்பால், அஜீத் பால் சிங், சுதர்சன் பட்நாயக் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.இந்தக் குழு நடத்திய விசாரணைக்குப் பின்னர் புகார் கூறப்பட்ட வீடியோகிராபர் முதல் நபராக நீக்கப்பட்டுள்ளார்.ரஞ்சிதா தேவி காமன்வெல்த் ஹாக்கி அணிக்கான உத்தேச வீராங்கனைகள் பட்டியலில் இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து ராஜீவ் மேத்தா கூறுகையில், தேசிய வீராங்கனையான ரஞ்சிதா கூறிய புகார்கள் மிகக் கடுமையானவை. இந்தப் புகாருக்கு உள்ளான வீடியோகிராபரை நீக்கி விட்டோம். மேலும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையகத்திற்கும் பரிந்துரைத்துள்ளோம்.கெளசிக் கடந்த பத்து வருடங்களாக பயிற்சியாளராக இருந்து வருகிறார். இதுவரை அவர் மீது எந்தப் புகாரும் வந்ததில்லை. ஆனால் இப்போது கடுமையான புகார் வந்துள்ளது. அது குறித்த முடிவு எடுக்கப்படும் வரை அவர் மகளிர் அணியின் பயிற்சியாளராக செயல்பட மாட்டார். மேலும் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன் டிராபி போட்டிக்கும் அவர் அணியுடன் செல்ல மாட்டார் என்றார்.சமீபத்தில்தான் சென்னையில் நடந்த ஹாக்கிப் போட்டியில் நடுவரின் மைதானத்தில் வைத்து மண்டையை உடைத்தார் முன்னாள் இந்திய வீரரான சுனில் எக்கா. இந்த நிலையில் மகளிர் ஹாக்கி அணியில் செக்ஸ் தொல்லை புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பலான காட்சிகளில் பசவராஜ்இந்த நிலையில் வீடியோகிராபர் பசவராஜ் பல்வேறு பெண்களுடன் உல்லாசாக இருப்பது போன்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது.அதில் பெண்களைக் கட்டிப் பிடிப்பது, முத்தமிடுவது, நெருக்கமாக அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இந்தப் பெண்கள் கார்ல் கேர்ள்கள் எனக் கூறப்படுகிறது. இந்திய ஹாக்கிக்கு பெரும் தலைக்குனிவை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளதால் இதில் மேலும் பல விவகாரங்கள் வெளியாகி பரபரப்பைக் கூட்டும் எனத் தெரிகிறது.