ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் ஹாக்கிப் போட்டியில் இந்தியாவின் பதக்கக் கனவு நிராசையானது.
நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணி 3 கோல்கள் போட்டது. இந்தியாவால் ஒரே ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது.
இந்தியா கடைசியாக 36 வருடங்களுக்கு முன்பு அரை இறுதிக்கு முன்னேறியிருந்தது. அதன் பிறகு நாம் ஒருமுறை கூட அரை இறுதிக்குப் போனதில்லை. இந்த முறை அந்தக் கனவை நாம் அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் இந்த முறையும் அது நனவாகவில்லை.
நேற்று நடந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் அக்சதீப் சிங் மட்டுமே கோலடித்தார். பெல்ஜியம் சார்பில் செபாஸ்டியன் டோக்கியர் 2 கோல்கள் போட்டார். டாம் பூன் 3வது கோலை அடித்தார்.