ஹாங்சோ: ஆசிய போட்டிகள் ஆடவர் ஹாக்கி பிரிவில் இறுதிச்சுற்றில் ஜப்பான் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12ஆம் நாள் முடிவில் இந்தியா தரப்பில் 21 தங்கம், 32 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என்று மொத்தமாக 86 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த நிலையில் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணியின் ஆதிக்கம் செய்து தொடர்ந்தது. முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்காத நிலையில், இரண்டாவது குவார்ட்டரில் இந்திய அணியின் மன்ப்ரீத் சிங் முதல் கோலை அடித்து அசத்தினார். தொடர்ந்து 3வது குவார்ட்டரில் இந்திய அணி 2வது கோலை அடித்து அசத்தியது.
தொடர்ந்து இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னரையும் கோல் அடிக்க, 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து கடைசி குவார்ட்டரில் இந்திய அணியின் அபிஷேக் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் அடுத்தடுத்து கோல் அடிக்க, ஜப்பான் அணி ஒரேயொரு கோலை மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தங்கத்தை வென்றது.
1966, 1998 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு பின் இந்தியா 4வது முறையாக ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. அதேபோல் ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றதன் மூலமாக அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.