ஷாங்காய்: ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபியில் தங்கம் வென்று இந்தியா வரலாறு படைத்துள்ளது. இந்தியா 1 - 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
இந்த இறுதிப் போட்டியில் முதல் 50 நிமிடங்கள் வரை இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அதனால் போட்டி பரபரப்பாக சென்றது. 51வது நிமிடத்தில் இந்தியாவின் ஜூக்ராஜ் முதல் கோல் அடித்தார். அதன் மூலம் இந்தியா 1 - 0 என முன்னிலை பெற்றது. அடுத்த 9 நிமிடங்களில் போட்டி முடிவுக்கு வந்தது. அதுவரை இரண்டு அணிகளும் கூடுதலாக கோல் ஏதும் அடிக்கவில்லை. இதை அடுத்து ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 - 0 என்ற கோல் கணக்கில் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.

2024 ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய ஹாக்கி அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லீக் சுற்றில் சீனா, மலேசியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான் என ஐந்து அணிகளை வீழ்த்தி இருந்தது. அரை இறுதியில் கொரியா அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.
மற்றொரு அரை இறுதியில் தொடரை நடத்தும் சீனா, பாகிஸ்தான் அணியை ஷூட் அவுட் முறையில் 2 - 0 என வீழ்த்தி இருந்தது. பின்னர் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதல் 50 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி ஷூட் அவுட்டுக்கு செல்லுமோ? என்ற பரபரப்பு இருந்தது.
சீனா ஷூட் அவுட்டில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்ததால், இந்திய அணிக்கும் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே சென்றது. 51வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் உதவியுடன் ஜுக்ராஜ் அபாரமாக கோல் அடித்தார். அதன் காரணமாக இந்தியா 1 - 0 என்ற கோல் கணக்கில் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் வென்று முதல் இடம் பிடித்த இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த சீனாவுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. வெண்கலத்துக்கான போட்டியில் கொரியா அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணிக்கு வெண்கலப் பதக்கம் அளிக்கப்பட்டது.