பெங்களூரு: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூருவில் சர்வதேச ஹாக்கி போட்டி நடந்துள்ளது. இதில் இந்தியா 3-0 என நியூசிலாந்துக்கு எதிராக தொடரை வென்றது. ஆனால் சரியாக திட்டமிடாததால், இந்தப் போட்டியை பார்க்க கிட்டத்தட்ட யாருமே வரவில்லை.
எந்த விளையாட்டாக இருந்தாலும், மற்ற நாடுகளுடன் விளையாடும்போது தான், குறிப்பாக வலுவான நாடுகளுடன் விளையாடும்போது தான் அனுபவம் கிடைக்கும்.
அந்த வகையில், நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்தது. புவனேஸ்வரில் தான் இந்தப் போட்டிகளை நடத்துவதாக இருந்தது. ஆனால், வரும் நவம்பரில் நடக்க உள்ள உலகக் கோப்பைக்காக புவனேஸ்வர் மைதானம் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதனால், போட்டிகளை பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பெங்களூருவின் மையப் பகுதியில் சில மைதானங்கள் இருந்தாலும், ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) மைதானத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் ஆட்டத்தில் 4-2, இரண்டாவது ஆட்டத்தில் 3-1, நேற்று நடந்த மூன்றாவது ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தொடரை வென்றது.
சாய் மைதானம், பயிற்சி மையம் என்பதால், அங்கு பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதி கிடையாது. மேலும் மைதானத்துக்குள் வந்து பார்ப்பதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஊருக்கு வெளியே இருப்பதால் சரியான போக்குவரத்து வசதி கிடையாது.
இப்படி இல்லை என்பது அதிகமாக இருக்கும்போது, மைதானத்துக்கு ரசிகர்கள் எப்படி வருவார்கள். வீரர்களுக்கு எப்படி ஒரு உற்சாகம் கிடைக்கும். குறைந்தபட்சம், இளம் வீரர்களையாவது அழைத்து வந்து, போட்டியை பார்க்க வைத்திருந்தால், அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கும். அதுவும் செய்யவில்லை.